பெங்களூரு: பெங்களூருவில் இளைஞர் கொலை வழக்கில், பிரபல கன்னட நடிகர் தர்ஷன் கைது செய்யப்பட்டார். பெங்களூருவில் 2 நாட்களுக்கு முன், மருந்தகத்தில் வேலை பார்த்து வந்த ரேணுகா சுவாமி என்ற இளைஞர் கொலை செய்யப்பட்டார். கொலை வழக்கு தொடர்பாக ஏற்கனவே 2 பேரை போலீசார் கைது செய்த நிலையில், தற்போது நடிகர் தர்ஷன் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு பெங்களூரு காமக்ஷிபாளையாவில் 30 வயதுடைய நபர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவர் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது இறந்து கிடத்த நபர் சித்ரதுர்காவைச் சேர்ந்த ரேணுகா சுவாமி என அடையாளம் காணப்பட்டார்.
இவர் பெங்களுருவில் உள்ள மருந்தகம் ஒன்றில் வேலை பார்த்து வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவர் கொலை செய்யப்பட்ட நிலையில் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தபோது அதில் 3 நபர்கள் ரேணுகா சுவாமியின் உடலை கொண்டு வந்து வீசுவது பதிவாகியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த மூவரை போலீசார் கைது செய்தனர்.
அவர்களிடம் விசாரணை மேற்கொண்டபோது திடுக்கிடும் தகவல் வெளியானது. பிரபல கன்னட நடிகர் தர்ஷன் இந்த கொலையில் சம்பந்தப்பட்டுள்ளார் என தெரியவந்தது. கொலைக்கான காரணம் குறித்த விசாரணையில், மறுந்தகத்தில் வேலை பார்த்து வந்த ரேணுகா சுவாமி, நடிகர் தர்ஷன் குறித்து தவறான தகவல்களை தர்ஷனின் நெருங்கிய தோழியான பவித்ரா கௌடாவுக்கு அடிக்கடி அனுப்பி வந்துள்ளார்.
அதுமட்டுமல்லாமல் பவித்ரா கௌடாவுக்கு ஆபாச குறுஞ்செய்திகளை அனுப்பியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாகதான் ரேணுகா சுவாமி கொலை செய்யப்பட்டிருக்கிறார் என்ற கோணத்தில் விசாரணையை தொடங்கினர். இந்நிலையில் இந்த கொலை வழக்கில் தற்போது நடிகர் தர்ஷன் கைது செய்யப்பட்டுள்ளார். கொலையில் தர்ஷனுக்கு நேரடி தொடர்பு இருக்கிறதா என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.