திருவில்லிபுத்தூர், ஏப்.25: திருவில்லிபுத்தூர் அருகே உள்ள மம்சாபுரம் பேரூராட்சி செயல் அலுவலர் மணிகண்டன் மற்றும் வத்திராயிருப்பு அருகே உள்ள வ.புதுப்பட்டி பேரூராட்சி செயல் அலுவலர் முகமது ரபீக் வெளிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் உள்ள அனைத்து நகர்ப்புற உள்ளாட்சிகளிலும் ஒவ்வொரு அரையாண்டிலும் முதல் 30 நாட்களுக்குள் சொத்துவரியை செலுத்தி 5 சதவீதம், அதிகபட்சமாக ரூ.5 ஆயிரம் வரை ஊக்கத் தொகை பெற நகர்ப்புற உள்ளாட்சி சட்ட விதிகளில் திருத்தம் கொண்டுவரப்பட்டு தமிழக அரசால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
அதன்படி நகர்புற உள்ளாட்சிகளில் உரிய காலத்தில் வரி செலுத்துபவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. எனவே மம்சாபுரம் பேரூராட்சியிலும், வ.புதுப்பட்டி பேரூராட்சியிலும் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்தி பொதுமக்கள் அனைவரும் தங்களின் 2023-24 முதல் அரையாண்டுக்கான சொத்துவரியினை வருகிற 30ம் தேதிக்குள் செலுத்தி 5 சதவீதம் அதிகபட்சமாக ரூ.5 ஆயிரம் வரை ஊக்கத் தொகை பெற்று பயன்பெறலாம். இவ்வாறு தெரிவித்துள்ளனர்.