ஏழாயிரம்பண்ணை, ஏப்.26: வெம்பக்கோட்டை அருகே பணம் தர மறுத்த சிக்கன் கடைக்காரரை தாக்கி கொலைமிரட்டல் விடுத்த 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. வெம்பக்கோட்டை அருகே டி.கோட்டையூர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜபாண்டி(39). இவர் அதே பகுதியில் சிக்கன் உணவகம் நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் அதே பகுதியைச் சேர்ந்த ஜெயக்குமார், மதன் உள்பட 4 பேர் ராஜபாண்டியிடம் ஆன்லைன் மூலம் ஆயிரம் ரூபாய் தருமாறு கேட்டுள்ளனர். அதற்கு அவர் தன்னிடம் பணம் இல்லை என மறுத்துள்ளார். இதையடுத்து அவர்கள் ராஜபாண்டியை சரமாரியாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.இதில் படுகாயம் அடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து ராஜபாண்டி அளித்த புகாரின் பேரில் நான்கு பேர் மீது வழக்கு பதிவு செய்து வெம்பக்கோட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.