‘எங்கள் குழுவில் ஒரு கர்ப்பிணியும் இணைந்து பாடியிருக்காங்க, நினைத்தாலே இப்போது பரபரப்பும், மகிழ்வும் தொற்றிக்கொள்ளும்’. நெகிழ்ச்சி யுடன் பேசுகிறார் ருபீனா சுபாஷ். நம் தமிழ் மண்ணிலிருந்து அயல்நாட்டுப் பணிகளுக்காக புலம்பெயர்ந்து சென்றவர்களை உயிர்ப்புடன் வைத்திருப்பது நமது தமிழும் அதன் கலாச்சாரமும்தான். மேலும் நம் தமிழ் இசைக்கும் ஒரு பெரிய அந்தஸ்து உண்டு. அந்த வகையில் தமிழ் சினிமாவின் பாடல்களுக்கு என்று உலக அரங்கில் மிகப்பெரிய வரவேற்பு எப்போதும் உண்டு. ஒரு பக்கம் நம் தமிழ் இசையமைப்பாளர்கள் நாடு கடந்து சென்று இசை நிகழ்ச்சிகளை நடத்தி தமிழ் சினிமாவின் மேன்மையை உயர்த்திப் பிடித்து வருகின்றனர். இன்னொரு பக்கம் அயல்நாடு வாழ் தமிழர்கள் நம் தமிழ் பாடல்களுக்கு மிகப்பெரிய அளவில் முக்கியத்துவம் கொடுத்து வருவதுடன், பலரும் தங்களைச் சிறந்த பாடகர்களாக உருவாக்கிக் கொள்ளும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள். அப்படி துபாயில் வாழும் நம் தமிழ் மக்களும் இப்படி தமிழ் சினிமா இசை மீது கொண்ட காதலால் உலக சாதனை செய்யும் விதமாக ஒரு இசை நிகழ்ச்சியை நடத்தி ‘ஆசியாபுக் ஆஃப் ரெக்கார்ட்’ஸில் இடம் பிடித்துள்ளனர்.
இந்த நிகழ்வில் இசையில் ஆர்வம் கொண்ட துபாய் வாழ் தமிழர்கள் ஒன்றிணைந்து தொடர்ந்து 24 மணி நேரம் ‘நான்ஸ்டாப்’பாக திரையிசைப் பாடல்களை பாடி ‘ஆசியா புக் ஆஃப் ரெக்கார்ட்’ஸில் இடம்பெற்று உலக சாதனையை படைத்துள்ளனர்.. ஆசியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸின் மதிப்பீட்டாளர் விவேக் கூறும்போது, ‘‘இதற்கு முன்பு இதேபோன்று 13.5 மணி நேரம் தொடர்ந்து பாடல்கள் பாடியது தான் சாதனையாக இருந்தது. அந்த சாதனையை தற்போது இவர்கள் முறியடித்துள்ளனர்” என்றார்.. இந்த சாதனை நிகழ்ச்சியின் பார்வையாளராகவும், இதில் பங்கேற்கும் இசைக்கலைஞர்களை உற்சாகப்படுத்தி கௌரவிக்கும் விதமாகவும் இசைப்புயல் ஏ.ஆர் ரஹ்மானின் சகோதரி ஏ.ஆர்.ரெஹைனா பங்கேற்க, அவரது முன்னிலையில் இந்த நிகழ்வு நடைபெற்றது. மேலும் நடிகை கோமல் சர்மா, மக்கள் தொடர்பாளர் ஏ.ஜான் ஆகியோரும் இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர்.பகவதி ரவி, பட், ஆர்ஜே ருபீனா சுபாஷ் ஆகியோர் இந்த நிகழ்வை ஒருங்கிணைத்துள்ளனர். இதில் பகவதி ரவி, தியாகு, பாலாஜி, ராகேஷ், அஜய், விக்னேஸ்வரன், ஜெகநாதன், பத்மினி, வள்ளி ரவி, மிருதுளா பாலகிருஷ்ணன், சரண்யா, ஜனனி, ஜெய்ஸி மஜோலி, சரண்யா உள்ளிட்ட 15 பாடகர்கள் இந்த சாதனை நிகழ்ச்சியில் பங்கேற்று பாடி ரசிகர்களைப் பரவசப்படுத்தினார்கள்.துபாயில் செய்யப்பட்ட இந்த இருபத்தி நான்கு மணிநேர தொடர் கரோகி பாடல் சாதனையை முறியடிக்க இன்னும் பல வருடங்கள் ஆகலாம் என்றும் பேசப்பட்டது.
பாடல்கள் பாடுகையில் என்னென்ன சவால்களை சந்தித்தனர்’ தன்னைப்பற்றிய சிறு அறிமுகத்துடன் பேசினார் ரூபினா சுபாஷ். ‘சொந்த ஊர் எனக்கு சென்னைதான், நிகழ்ச்சித் தொகுப்பாளராக என்னுடைய வாழ்க்கைத் துவக்கம், தொடர்ந்து மீடியா வாழ்க்கை. கடந்த நான்கு வருடங்களா துபாயில் செட்டில் ஆகிட்டேன். 50 மணி நேரங்கள் தொடர்ந்து ரேடியோவில் பேசிய முதல் பெண் என்கிற உலக சாதனையையும் இதற்கு முன்பு முடித்திருக்கேன். துபாயின் மலேசியா வாசுதேவன் எனச் செல்லமாக அழைக்கப்படற பகவதி ரவி சாருடைய இசைக் குழுவின் நிகழ்ச்சிக்கு சென்றிருந்த வேளையில்தான் ஏன் நமக்கென ஒரு இசைக் கச்சேரி குழு கூடாதுன்னு கேட்டேன், கேட்டவுடன் பகவதி ரவி சார் குழுவை உருவாக்கிட்டார். அதுதான் சல்வா லைட் மியூசிக் குழு,அதன் மூலமாகதான் இந்த சாதனை நிகழ்த்தியிருக்கோம். எங்களுடைய பகவதி சார் பிறந்தநாள் சிறப்பாக தான் இந்த நிகழ்ச்சியை உருவாகினோம். மேலும் வெறுமனே பாடல்கள் பாடாமல் , இடையிலே என்னுடைய நிகழ்ச்சித் தொகுப்புடன் பாடல்கள் குறித்த சுவாரஸ்ய தகவல்கள், பாடல் குறித்த விவரங்கள் இப்படி நான் தொடர்ந்து 24 மணி நேரங்கள் பேசினேன். எங்களுடைய குழுவில் கர்ப்பிணியான வள்ளியும் கலந்துகொண்டு பாடினாங்க, நாங்க மறுத்தும் கேட்காம அவங்க பாடினாங்க. நிறைய குரல் பயிற்சிகள், உணவு, தூக்கம், எல்லாமே நாங்க பயிற்சிகள் எடுத்துக்கிட்டு, முறைப்படி ஓய்வுகள் எல்லாம் எடுத்துக்கிட்டு இந்த சாதனையை செய்தோம். மேலும் எல்லோருமே வேலையில் இருக்கோம், தூரமும் அதிகம், ஒவ்வொரு ஞாயிறும் நாங்க ஒண்ணுசேர்ந்து பயிற்சி எடுத்துக்கிட்டோம். முதலில் மூன்று மணி நேரம், தொடர்ந்து ஆறு மணி நேரம் இப்படியே நேரத்தை கூட்டி பாட ஆரம்பிச்சு 24 மணி நேரம் சாதனையை முடிச்சிருக்கோம்’ என்னும் சல்வா குழு டெக்னிக்கலாகவும் தயாராகியிருக்கிறார்கள்.
‘முதலில் எங்களுடைய தொண்டையும், குரல்வளையும் பாதுகாப்பாக இருக்கணும். அதற்கான பயிற்சிகள் செய்தோம். பாடும்போது பேச வேண்டாம், ஓய்வு எடுப்போம் என முடிவு செய்துகொண்டோம். 24 மணி நேரத்தில் 350க்கும் மேலான பாடல்கள். கர்ப்பிணியான பெண்ணையும் நாங்கள் கவனமாக பார்த்துக்கணும். பிப்ரவரி மாதம் என்கிறதால் காதல் பாடல்களைத்தான் நாங்கள் டீமாக எடுத்துக்கொண்டோம். ஒரு தனிப்பாடல், ஒரு ஜோடிப்பாடல் என மாறி மாறிதான் திட்டமிட்டோம். அதைவிட முக்கியம் மைக், ஸ்பீக்கர்கள் 24 மணி நேரம் தாக்குபிடிக்கணும். அதை எல்லாம் கவனத்துடன் தான் இந்த சாதனையை உருவாக்கினோம். மேலும் எங்களுடைய இசைக்கச்சேரியைப் பார்க்கவே அவ்வளவு கூட்டம் சேர்ந்திருந்தது. ஆன்லைனில் கூட எங்களுக்கு ஆதரவு கொடுக்க நிறைய மக்கள் இருந்தாங்க. என்ன செய்தாலும் அந்த அதிகாலை 4மணி தூக்கத்தைக் கட்டுப்படுத்த யாராலும் முடியாது. அதைத்தான் சமாளிக்கக் கடினமாக இருந்தது. ஒருத்தருக்கு ஒருத்தர் உதவி செய்துதான் இந்த சாதனையை முடித்தோம். திட உணவுகள் எடுத்தால் தூக்கம் வரும் என்பதால் திரவ உணவுகள் அதிகம் எடுத்துக்கொண்டோம். எல்லாம் முடிந்து அந்த சாதனைச் சான்றிதழை வாங்கும் போது அவ்வளவு சந்தோஷமா இருந்தது.
– ஷாலினி நியூட்டன்