Sunday, May 19, 2024
Home » ஏப்.23ல் கண்ணகி கோயில் விழா

ஏப்.23ல் கண்ணகி கோயில் விழா

by Lakshmipathi

*13ம் தேதி தமிழக-கேரள அதிகாரிகள் ஆலோசனை

கூடலூர் : தமிழக-கேரள எல்லைப் பகுதியில் அமைந்துள்ள கண்ணகி கோயில் சித்ரா பவுர்ணமி விழா ஏப்.23ல் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு கோயிலுக்குச் செல்லும் பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்வது குறித்து இருமாநில அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டம் வரும் சனிக்கிழமை தேக்கடியில் நடைபெறுகிறது.இரண்டாயிரம் ஆண்டு பழமையும், சரித்திரப்புகழும் வாய்ந்த கண்ணகி கோயில், கூடலூருக்கு தெற்கேயுள்ள வண்ணாத்திப்பாறையில், தமிழக கேரள எல்லைப்பகுதியான, மங்கலதேவி மலையில் புலிகள் சரணாலய பகுதியில் 4830 அடி உயரத்தில் உள்ளது. இந்த கண்ணகி கோயிலின் முகப்பு வாயில், மதுரையை நோக்கி அமைந்துள்ளது.

1817ல், கிழக்கிந்திய கம்பெனி நடத்திய சர்வேயில், கண்ணகி கோயில் தமிழக எல்லைப் பகுதியிலேயே இருப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அதன் பின்னர் 1893, 1896ல் நடத்திய சர்வேயும், 1913, 1915ம் ஆண்டுகளில் வெளியிடப்பட்ட எல்லை வரைபடங்களும் இதையே வலியுறுத்துவதாக உள்ளன. கடந்த 1959 வரை கேரள அரசு, கண்ணகி கோயில் எல்லை குறித்து எவ்வித ஆட்சேபனையும் எழுப்பவில்லை. 1976ல், தமிழ்நாடு கேரள அரசு அதிகாரிகள் கூட்டாக நடத்திய சர்வேயிலும், கண்ணகி கோயில் கேரள எல்லையில் இருந்து 40 அடி தூரம் தள்ளி தமிழகப் பகுதியில் இருப்பது ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது.

இந்நிலையில் கேரள வனப்பகுதி கொக்கரக்கண்டம் வழியாக கோயிலுக்கு சாலை அமைத்த கேரள அரசு, கண்ணகி கோயிலை சொந்தம் கொண்டாடியது. இதையடுத்து நீதிமன்ற உத்தரவுப்படி, கடந்த 1985 முதல் ஒவ்வொரு ஆண்டும், விழாவுக்கு முன்பே இருமாநில அரசு அதிகாரிகளும் விழா நடத்துவது தொடர்பாக கலந்து பேசி முடிவு செய்வார்கள்.
இதில் தேனி, இடுக்கி மாவட்ட கலெக்டர்களின் தலைமையில் இருமாநில அதிகாரிகள், இருமாநில பக்தர்கள் கலந்து கொள்ளும் முன்னேற்பாடு ஆலோசனைக் கூட்டம் நடத்தப்படும். இதில் பக்தர்களுக்கு இருமாநில அரசும் செய்துள்ள வசதிகள் குறித்து உறுதி செய்யப்படும்.

இந்த ஆண்டு ஏப்.23ல் சித்திரை முழுநிலவு விழா நடைபெற உள்ளது. விழா நடத்துவது தொடர்பாக வரும் சனிக்கிழமை (ஏப்.13) அன்று இருமாநில அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டம் தேக்கடியிலுள்ள ராஜீவ்காந்தி வனவிலங்கு ஆராய்ச்சி அரங்கத்தில் நடைபெற உள்ளது.இதுகுறித்து பக்தர்கள் கூறுகையில், “கோயிலுக்குச் செல்லும் இருமாநில பக்தர்களுக்கு வாகன வசதி, குடிநீர், உணவு வசதிகள், மருத்துவம் மற்றும் பாதுகாப்பு முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசனை செய்து முடிவெடிப்பது வழக்கம்.

ஆலோசனைக் கூட்டத்திற்கு பின்பே பளியன்குடி வழியாக பக்தர்கள் நடந்து செல்லும் வனப்பாதை செப்பனிடும் பணியும், கோயில் வளாகத்தில் உள்ள முட்புதர்களை அகற்றும் பணியும் நடைபெறும். எனவே இருமாநில அதிகாரிகளும் பக்தர்களுக்கு வேண்டிய ஏற்பாடுகளை உடனே செய்யவேண்டும்’’ என்றனர்.

You may also like

Leave a Comment

3 × one =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi