சென்னை: டிஎன்பிஎஸ்சிக்கு 5 புதிய உறுப்பினர்களை நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் (டிஎன்பிஎஸ்சி) தலைவர் மற்றும் உறுப்பினர்கள் அரசால் தேர்வு செய்யப்பட்டு, ஆளுநர் ஒப்புதலுடன் நியமிக்கப்படுகின்றனர். இதில் ஒரு தலைவர் மற்றும் 14 உறுப்பினர்களுடன் செயல்பட வேண்டிய டிஎன்பிஎஸ்சி, தற்போது தலைவரின்றி வெறும் 4 உறுப்பினர்களுடன் செயல்படுகிறது. தற்போதைய உறுப்பினர் முனியநாதன், தலைவர் பொறுப்பை கூடுதலாக கவனித்து வருகிறார்.
இந்நிலையில், மேலும் 5 பேர் டிஎன்பிஎஸ்சி உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டு உள்ளனர். இதற்கான தமிழக அரசின் பரிந்துரையை ஏற்று ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் வழங்கி உள்ளார். இதுதொடர்பாக தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி சிவனருள், முன்னாள் ஐஆர்எஸ் அதிகாரி ஆர்.சரவணகுமார், மருத்துவர் ஏ.தவமணி, மேயர் சிட்டிபாபு தெருவைச் சேர்ந்த உஷா சுகுமார், கோவை ஸ்ரீநாராயணகுரு மேலாண்மை கல்வி நிறுவன முதல்வர் ஆர்.பிரேம்குமார் ஆகிய 5 பேரும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்துக்கு புதிய உறுப்பினர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் 6 வருட காலங்களுக்கு அல்லது 62 வயது வரை இந்த பதவியில் நீடிப்பார்கள். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.