அந்தியூர், ஏப்.19: அந்தியூர் அருகே வட்டார மருத்துவ அலுவலர் சக்தி கிருஷ்ணன் தலைமையில் நடந்த சிறப்பு மருத்துவ முகாமில் ஈரோடு மாவட்டத்திலேயே முதன்முறையாக 150 கர்ப்பிணிகளுக்கு எக்கோ, தைராய்டு பரிசோதனை செய்து சாதனை படைக்கப்பட்டது. ஈரோடு மாவட்டம், அந்தியூர் அருகே தவிட்டுப்பாளையத்தில் கர்ப்பிணி பெண்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது. வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் சக்தி கிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற முகாமில் அத்தாணி, சின்னத்தம்பி பாளையம், எண்ணமங்கலம், பர்கூர், ஓசூர் ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளை சேர்ந்த 150 கர்ப்பிணி பெண்கள் கலந்து கொண்டனர்.முகாமில் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், ரத்த சோகை, தைராய்டு, இருதய பிரச்னைகள் உள்ளவர்களை கண்டறியும் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. இந்த சோதனை மேற்கொள்வதில் நிலவும் சிரமங்களை கருத்தில் கொண்டு தனியார் இருதய நோய் நிபுணர் மற்றும் தனியார் ஆய்வகங்களை அணுகி ஏழை மக்களுக்கு பயன்பெறும் வகையில் வட்டார மருத்துவ அலுவலர் சக்தி கிருஷ்ணன் முகாமை முன்னின்று ஏற்பாடு செய்திருந்தார்.
சிறப்பு முகாமில் எக்கோ, தைராய்டு பரிசோதனை 150 பேருக்கு மேற்கொள்ளப்பட்டது. ஈரோடு மாவட்டத்திலேயே முதன்முறையாக எக்கோ பரிசோதனை 150 கர்ப்பிணி பெண்களுக்கு இலவசமாக செய்யப்பட்டது. முகாமில் கலந்து கொண்ட கர்ப்பிணி பெண்களுக்கு பாசிப்பயிறு, கொண்டக்கடலை, கடலை உருண்டை, பேரிச்சம்பழம், ராகி வடை போன்ற உணவுகளும் வழங்கப்பட்டன. இம்முகாமில் மருத்துவ அலுவலர்கள் டாக்டர்கள் சங்கீதா, சண்முகசுந்தரம் மற்றும் மருத்துவ பணியாளர்கள், சுகாதார செவிலியர்கள், ஆய்வக நுட்புணர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு மருத்துவ பரிசோதனைகள், சிகிச்சைகள் அளித்து ஆலோசனை வழங்கினர். இதையடுத்து ஈரோடு மாவட்டத்திலேயே முதன்முறையாக 150 கர்ப்பிணிகளுக்கு எக்கோ, தைராய்டு பரிசோதனை செய்து சாதனை படைக்கப்பட்டதற்கு வட்டார மருத்துவ அலுவலர் தலைமையிலான மருத்துவ குழுவினருக்கும், மாவட்ட குடும்ப நலத்துறைக்கும் அந்தியூர் பகுதி பொதுமக்கள், பயனாளிகள், சமூக ஆர்வலர்கள் நன்றி தெரிவித்தனர்.