பெரம்பூர்: வியாசர்பாடியில் 11 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 73 வயது முதியவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை வியாசர்பாடி பகுதியை சேர்ந்தவர் 30 வயது பெண். இவருக்கு 2 பெண் பிள்ளைகள் மற்றும் ஒரு ஆண் பிள்ளை உள்ளது. இவரது மூத்த மகள் 11 வயது சிறுமி. 6ம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று காலை கணவன், மனைவி இருவரும் வேலைக்கு சென்றுவிட்டனர். 11 வயது சிறுமி மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது இவரது வீட்டில் மேல் வீட்டில் வசிக்கும் அண்ணாமலை (73) என்பவர் சிறுமி தனியாக இருப்பதை தெரிந்து நைசாக பேசியுள்ளார்.
பின்னர், சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். வேலை முடிந்து தாய் வீட்டுக்கு வந்ததும் நடந்த சம்பவம் குறித்து சிறுமி கூறி அழுதுள்ளாள். இதையடுத்து சிறுமியின் தாய் செம்பியம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தபோது சிறுமிக்கு முதியவர் அண்ணாமலை பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது. இதையடுத்து மகளிர் போலீசார் அண்ணாமலையை போக்சோ சட்டத்தில் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.