வைணவி எனும் திருப்பெயரோடு ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வீற்றிருந்தாள். உக்கிரமாக இருந்ததால் அங்கிருந்து கண்ணனூரிலுள்ள மேட்டின் மீது வைத்தார்கள். இந்த கண்ணனூர் அம்மன்தான் சமயபுரத்து மாரியம்மனாக இன்று பேரருளை பொழிகிறாள். விஜயநகர மன்னர் ஒருவர், ‘‘தென்னாட்டில் எங்கள் படை போரிட்டு வெற்றி பெற்றால் உனக்கு இங்கு கோயில் எழுப்புவோம்’’ என்று வேண்டிக் கொண்டார்.
மாரியின் அருளால் போரில் வென்றான். அம்மனை கோயிலுக்குள் கொலுவிருத்தி அழகு பார்த்தான். பரிவார தெய்வங்களாக விநாயகரையும், கருப்பண்ணசாமியும் பிரதிஷ்டை செய்தனர். தமிழகத்தின் முக்கிய சக்தித் தலங்களில் ஒன்றாக விளங்குகிறது. கோயிலில் எப்போதும் கூட்டம்தான். மாவிளக்கு போடுதல், மொட்டை போடுதல், உடல் உறுப்புகள் உரு என்று எல்லாவிதமான பிரார்த்தனைகளையும் இங்கு நிறைவேற்றுகிறார்கள். சமயபுரத்து மாரியம்மன் பேரருளும், பேரழகும் பொலிய வீற்றிருக்கும் மகாசக்தியாவாள்.
கைகூப்பி மனதில் நினைத்த கணத்திலேயே வரங்களை ஈனும் வரப்பிரசாதி. உதடு பிரித்தும் பேசும் தெய்வத்தாய். கோடிக்கணக்கான குடும்பங்களின் குல தேவதை. சமயபுரத்தாளே…. என்று திக்கு நோக்கி கைகூப்பினாலேயே ஆசி தரும் ஆதிசக்தி. திருச்சி மாநகரத்திலிருந்து சென்னை செல்லும் தேசிய நெடுஞ் சாலையில் 15 கி.மீ. தொலைவில் இத்தலம் அமைந்துள்ளது.