பெங்களூரு : கர்நாடகாவில் எடியூரப்பாவின் மகனுக்கு எதிராக சுயேட்சையாக போட்டியிடும் ஈஸ்வரப்பா கட்சி தலைமை வலியுறுத்தியும் கூட தனது முடிவை மாற்றிக் கொள்ள மறுத்து இருப்பது பாஜகவிற்கு தலைவலியை ஏற்படுத்தி உள்ளது. கர்நாடக முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா, அவரது மகனும் மற்றும் பாஜக தலைவருமான விஜேந்திரா ஆகியோருக்கு எதிராக அதே கட்சியைச் சேர்ந்த முன்னாள் துணை முதலமைச்சர் ஈஸ்வரப்பா போர்க்கொடி உயர்த்தி வருகிறார். ஹாவேரி தொகுதியில் போட்டியிட தனது மகன் கந்தேஸுக்கு வாய்ப்பளிப்பதாக உறுதி அளித்துவிட்டு, தந்தையும் மகனும் முதுகில் குத்திவிட்டனர் என்பது ஈஸ்வரப்பாவின் குற்றச்சாட்டு.
தற்போதைய எம்எல்ஏவும் முன்னாள் முதலமைச்சருமான பசவராஜ் பொம்மை, ஹாவேரி தொகுதி வேட்பாளராக நிறுத்தப்பட்டு இருப்பது மற்றும் எடியூரப்பாவின் ஆதரவை பெற்ற சிக்கமளுரு எம்.பி.சோபா கரன்ட்லஜே பாஜக வலுவாக உள்ள பெங்களூரு வடக்கில் போட்டியிடுவது போன்றவற்றால், ஈஸ்வரப்பா கடும் அதிருப்தி அடைந்துள்ளார். தனது மகன் கந்தேஸுக்கு வாய்ப்பு அளிக்க மறுத்ததால் எடியூரப்பாவின் மற்றொரு மகனும் சிவமொக்கா எம்பியுமான ராகவேந்திராவுக்கு எதிராக ஈஸ்வரப்பாவே சுயேட்சையாக களம் இறங்கி உள்ளார். அவரது இந்த செயலால் கடும் அதிர்ச்சி அடைந்துள்ள உள்துறை அமைச்சர் அமித்ஷா, வேட்பு மனுவை வாபஸ் பெறுமாறு நேற்று நேரில் வலியுறுத்தினார். ஆனால் அதனை ஏற்க ஈஸ்வரப்பா மறுத்துவிட்டார். இன்று டெல்லிக்கு அழைக்கப்பட்டுள்ள ஈஸ்வரப்பாவிடம் அமித்ஷா, நட்டா உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.