உடுமலை, ஏப். 27: திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் அருகேயுள்ள கிருஷ்ணாபுரத்தில் அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை உள்ளது. இந்த ஆலைக்கு ஒப்பந்த அடிப்படையில் விவசாயிகள் கரும்பு சப்ளை செய்கின்றனர். ஆண்டுதோறும் ஏப்ரலில் கரும்பு அரவை துவங்கி செப்டம்பரில் நிறைவு பெறும்.
இந்த ஆண்டும் அதற்கேற்றவாறு விவசாயிகள் கரும்பு வழங்க ஒப்பந்தம் செய்தனர். மார்ச் முதல் வாரம் பாய்லர் இளஞ்சூடேற்றும் நிகழ்வு நடந்தது. இதைத்தொடர்ந்து, ஏப்ரல் 23ம் தேதி அரவை துவங்கும் என தெரிவிக்கப்பட்டது.
ஆனால், கரும்புகளை அரவை இயந்திரத்தில் தூக்கிபோடும் கிரேன் தயாராகவில்லை. புதிய கிரேன் பொருத்தும் பணி நடைபெற்றுவருகிறது. இன்னும் நிறைவு பெறவில்லை. இதையடுத்து, கரும்பு அரவை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. வரும் மே 1 ம் தேதி முதல் அரவை துவங்கும் என ஆலை நிர்வாகிகள் தெரிவித்தனர். கரும்பு அரவை தாமதமாவதால் விளைந்த கரும்புகளை உரிய நேரத்தில் வெட்ட முடியாமல் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.