பெங்களூரு: மிகவும் அரிதான பச்சை கிளியை விற்பனை செய்வதற்கு முயன்ற நபர், மங்களூருவில் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக ஐ.ஆர்.எஸ். அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். கர்நாடக மாநிலம் மங்களூருவில் ஒரு நபர், அரிய வகை பச்சை கிளியை சட்டவிரோதமாக விற்பனை செய்வதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளார். வன உயிர் பாதுகாப்பு ஆர்வலர்கள் உதவியுடன் இந்த தகவல் ஐஆர் எஸ் அதிகாரிகளுக்கு கிடைத்தது. இதைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற அதிகாரிகள் அந்த நபரிடம் விசாரணை நடத்தினர். அதிகாரிகள் நடத்திய விசாரணையில், விற்பனை செய்வதற்கு தடை செய்யபட்ட மிகவும் அரிதான பச்சை கிளிகள் சிக்கியது. 7 பச்சை கிளிகளை பறிமுதல் செய்த அதிகாரிகள், இந்த சம்பவம் தொடர்பாக வேறு யார் யாருக்கு தொடர்பு இருக்கிறது என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது குறித்து அதிகாரி ஒருவர் கூறியதாவது: மங்களூருவில் பறிமுதல் செய்யப்பட்ட 7 பச்சை கிளிகள், பொதுவாக நமது இந்தியாவின் வடகிழக்கு பகுதிகளில் காணப்படும். நேபாள், பூடான், மியான்மர், தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளில் இது காணப்படுகிறது. இந்த வகை பச்சை கிளியின் அலகு சிகப்பு நிறத்திலும் உடல் பச்சை நிறத்திலும் காணப்படும். அதே நேரம் அதன் நெஞ்சு பகுதிகளில் சிகப்பு நிறம் காணப்படும். இந்த வகை கிளிகளை வீட்டில் வளர்ப்பதற்கு தடை செய்யப்பட்டுள்ளது. அதே நேரம் இதன் குணம் சிறப்பானது என்பதால் விதிகளை மீறி ரகசியமாக வளர்ப்பதற்கு பலர் விரும்புகின்றனர். இதை தங்களுக்கு சாதமாக பயன்படுத்திக்கொள்ளும் ஒரு கும்பல், ரகசியமாக விற்பனை செய்கிறது. கடந்த 10 வருடத்தில் இது போன்ற செயல்கள் நிகழவில்லை. இந்நிலையில், மங்களூருவில் 7 கிளிகள் சிக்கியுள்ளது. அத்துடன் விற்பனை செய்வதற்கு முயன்ற ஒரு நபரும் கைது செய்யப்பட்டுள்ளார். கைதான நபரிடம் இந்த கிளிகள் எப்படி கிடைத்தது? இதை எங்கே இருந்து கொண்டு வரப்பட்டது? என்பதை விசாரணை நடத்தி வருகிறோம், என்றார். பறிமுதல் செய்யப்பட்ட மிகவும் அரிய வகை பச்சை கிளிகள், மங்களூரு பிலிகுட்டா வன உயிரியல் பூங்கா நிர்வாகத்தில் வழங்கப்பட்டுள்ளது.