*அரிய வகை மீன்கள், நெருப்புக்கோழியை பார்த்து ரசித்தனர்
ஏலகிரி : ஏலகிரிமலை பண்டேரா பார்க்கில் செல்ல பிராணிகளுக்கு உணவு கொடுத்து சுற்றுலா பயணிகள் மகிழ்ந்தனர். மேலும் அரிய வகை மீன்கள் மற்றும் நெருப்புக்கோழிகளை பார்த்து ரசித்தனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலமான ஏலகிரி மலை ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படுகிறது. இந்த ஏலகிரி மலை இயற்கை நிறைந்த பசுமை நிறமாகவும், உயர்ந்த பிரதேசமாகவும் காணப்படுகிறது. இங்கு அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகா, ஆந்திரா மற்றும் பாண்டிசேரி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் விடுமுறை நாட்களில் வந்து பொழுதை போக்கி செல்கின்றனர்.
மேலும், இங்குள்ள பண்டேரா பார்க்(பறவைகள் சரணாலயம்), செல்பி பார்க், படகு இல்லம், இயற்கை பூங்கா, சிறுவர் பூங்கா, மூலிகை பண்ணை, கதவ நாச்சியம்மன் கோயில், மங்களம் சுவாமி மலை உள்ளிட்ட ஏராளமான சுற்றுலா தலங்கள் பொதுமக்களை வெகுவாக கவர்ந்துள்ளது. அதன்படி, நேற்று நிலாவூர் பண்டேரா பறவைகள் சரணாலயத்தில் விதவிதமான மீன் வகைகள், வாத்துகள், முயல்கள், எலிகள், பாம்பு வகைகள், அரிய வகை ெநருப்புக்கோழி வகைகள், பறவை இனங்கள் உள்ளிட்டவை சுற்றுலா பயணிகளின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது. இங்கு வரும் சுற்றுலா பயணிகள் இந்த செல்ல பிராணிகளுக்கு உணவு அளித்து மகிழ்ந்தனர். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கண்டு ரசிக்கும் சுற்றுலா தலமாக இருப்பதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.