டெல்லி: மருத்துவமனை, கல்வி நிறுவனங்களில் அதிகபட்சம், 5 லட்சம் ரூபாய் வரை பண பரிவர்த்தனை செய்து கொள்ள ரிசர்வ் வங்கி அனுமதி வழங்கியது. ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தலைமையில் அண்மையில் மும்பையில் நடைபெற்ற டிசம்பர் மாத நிதிக்கொள்கைக் குழுக் கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. பின்னர் இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்அப்போது; தற்போது பல்வேறு வகை யுபிஐ பரிவர்த்தனைகளுக்கான வரம்பு அடிக்கடி மதிப்பாய்வு செய்யப்பட்டு வருகிறது.
அந்த வகையில், மருத்துவமனைகள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு பணம் செலுத்துவதற்கான யுபிஐ பரிவர்த்தனை வரம்பை அதிகரிக்க முன்மொழியப்பட்டது. அதன்படி, தற்போது ஒரு பரிவர்த்தனைக்கு ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ. 5 லட்சம் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. இது கல்வி மற்றும் சுகாதார நோக்கங்களுக்காக யுபிஐ பரிவர்த்தனையை மேற்கொள்பவர்களுக்கு அதிக அளவில் பணம் செலுத்த உதவும். மீண்டும் மீண்டும் பணம் செலுத்துவதற்கான இ-ஆணைகள் (e-mandates) வாடிக்கையாளர்களிடையே பிரபலமாகிவிட்டது” என தெரிவித்தார்.
முன்னதாக, வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் கடன்களுக்கான வட்டி விகிதமான ரெப்போ ரேட்டில் எந்த மாற்றமும் இல்லை. தொடர்ந்து 6.5 சதவீதமாக தொடரும் என்று ஆர்பிஐ அறிவித்திருந்தது. இதனால், வீட்டுக் கடன், வாகன கடன், நகை கடன், பர்சனல் லோன் என அனைத்து கடனுக்கான வட்டி விகிதம் உயர வாய்ப்பு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.