*5 கடைகளுக்கு ரூ.19 ஆயிரம் அபராதம் விதிப்பு
*உணவு பாதுகாப்புத் துறையினர் நடவடிக்கை
தேனி : தேனி அல்லிநகரம் மற்றும் கொடுவிலார்பட்டியில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு செய்தனர். இதில் தடைசெய்யப்பட்ட புகையிலை மற்றும் பாலித்தீன் பைகளை பறிமுதல் செய்தனர்.மாநில உணவு பாதுகாப்பு ஆணையர் மற்றும் மாவட்ட கலெக்டர் ஷஜீவனா ஆகியோரின் உத்தரவின் பேரில் தேனி மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை நியமன அலுவலர் மருத்துவர் ராகவன் முன்னிலையில் போலீசாருடன் இணைந்து தேனி உணவு பாதுகாப்புத் துறையினர் தேனி அல்லிநகரம் மற்றும் வீரப்ப அய்யனார் கோயில் தெரு, கொடுவிலார்பட்டி பகுதிகளில் உள்ள கடைகளில் திடீர் ஆய்வு நடத்தினர்.
ஆய்வின்போது, தேனி அல்லிநகர மற்றும் வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் பாண்டியராஜ் போலீஸ் ஏட்டு ரமேஷ் கண்ணன் ஆகியோர் சேர்ந்து சோதனை மேற்கொண்டனர்.இப்பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு அருகில் உள்ள கடைகளில் ஆய்வு செய்தனர். அப்போது 3 கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் விற்பனை செய்தது தெரியவந்தது. இதேபோல தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பாலித்தீன் பைகள் வைத்திருந்தது தெரியவந்தது. இதனையடுத்து தலா ரூ. 2 ஆயிரம் வீதம் 2 கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. இதேபோல புகையிலை பொருள்கள் விற்பனை செய்த 3 கடைகளுக்கு தலா ரூ. 5 ஆயிரம் வீதம் அபராதம் விதிக்கப்பட்டது.