‘‘வேட்பாளர்களுக்கு ஆள் பிடிக்கிறாங்களாமே..’’ என கேட்டார் பீட்டர் மாமா. ‘‘சின்ன மாவட்டத்தில் இலை கட்சியின் சார்பில் போட்டியிட ஆள் கிடைக்காமல் இலை கட்சி திணறி வந்ததாம். குறிப்பாக, போட்டியிடுவதற்கு முக்கிய நபர்கள் பலரும் ஆர்வம் காட்டவில்லையாம். வேறுவழியின்றி தொழிலதிபர் ஒருவரை களமிறக்க இலை கட்சியின் தலைமை முடிவு செய்துள்ளதாம். திரைமறைவில் நடந்த வேலைகள் ‘அனைத்தும்’ முடிந்து விட்டதாம். வேட்பாளராக அந்த தொழிலபதிர் களமிறங்க உள்ளாராம்..’’ என்றார் விக்கியானந்தா. ‘‘கெத்து காட்ட நினைச்சு வெத்தா போச்சாமே…’’ என சிரித்தார் பீட்டர் மாமா.
‘‘ஆமா..தாமரை கட்சி சார்பில் கடைக்கோடி மாவட்டத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் கூட்டணி கட்சியினரை எல்லாம் சேர்த்துக் கொண்டு வரிசையாக நிற்க வைத்து விடலாம் என்று மவுண்ட் தலைவர் கணக்கு போட்டாராம். ஆனால் தேனிக்காரரோ, குக்கர் கட்சி தலைவரோ அந்த பக்கமே எட்டி பார்க்கவில்லை. கட்சி மாறிய சமத்துவ தலைவரும், முன்னேற்ற கழகத்தை சேர்ந்த பாண்டிய தலைவரும்தான் பங்கேற்றார்களாம். கூட்டணிக்கு அச்சாரமிடுகின்ற வாசமான தலைவர் கூட வரவில்லையாம். தேர்தலுக்கு முதல் நாள் நடந்த கூட்டத்தில் நமது பலத்தை காட்டியிருக்க வேண்டாமா என்று தொண்டர்கள் அலுத்துக்கொண்டார்களாம்..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘அந்தப் பக்கத்துல கட்சியே கரைஞ்சு போச்சு போல…’’ என புதிராக கேட்டார் பீட்டர் மாமா.‘‘குயின்பேட்டை மாவட்டத்துல பாக்கம் என்று முடியுற பேர் ஊராட்சி இருக்குது. இந்த பகுதியில மன்னிப்பு வார்த்தை பிடிக்காத மறைந்த நடிகர் கட்சி தொடங்குனபோது, பலபேர் இணைஞ்சாங்க. இப்ப எல்லாரும் கட்சிய விட்டு மாற்றுக்கட்சிக்கு போக ஆரம்பிச்சுட்டாங்க. மீதி இருக்குற தொண்டருங்க இனி, கட்சியில் செலவு செய்வது மண் குதிரையை நம்பி ஆத்துல இறங்குற கதையாகிடும்னு மாற்று கட்சிக்கு மாற தயாராகி வர்றாங்களாம். இதனால வர்ற எலக்ஷன்ல அந்த கட்சியில தொண்டருங்க என்பதே எட்டாக் கனியாக இருக்கும்னு பேசிக்கிறாங்க.
பேரூராட்சி மட்டுமில்லாம, குயின்பேட்டை மாவட்டத்தோட மொத்த நிலைமையும் இப்படித்தான் இருக்குதாம். அப்புறம் கட்சியே காணாம போனாலும் ஆச்சர்யபடுறதுக்கில்லன்னு விஷயம் தெரிஞ்ச ஜனங்க பேசிக்கிறாங்க..’’ என்றார் விக்கியானந்தா. ‘‘சுயேச்சை போட்ட குண்டால் பாஜ பதறுதே..’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘புதுச்சேரியில் சுயேச்சையாக சட்டசபைக்கு முதன்முதலாக நுழைந்த சிவசங்கரமானவர், எடுத்த எடுப்பிலேயே பாஜ ஆதரவு நிலைப்பாட்டை எடுத்தார். டெல்லி வரை அப்போதைய மாநில தலைமை அழைத்துச் சென்று பிரபலமாக்கியது. ஆனால் எதிர்பார்த்த வாரியமோ, எந்தவித பதவியோ கிடைக்காததால் விரக்தியில் தொண்டர்களிடம் புலம்பினார்.
தற்போது நாடாளுமன்ற தேர்தலில் சீட் கிடைக்குமா என காத்திருந்தார்.
ஆனால் மாநில தலைமையோ அவர் ஆதரவு சுயேச்சைதான் என்று தடாலடி காட்டி நிராகரிக்க விரக்தியின் உச்சத்திற்கு சென்ற அந்த சிவசங்கரமானவர், சீட்டுக்கு ரூ.50 ேகாடி பாஜ பேரம் பேசுவதாக உண்மையை போட்டு உடைத்தார். இது பரபரப்பாகி போனது. இதனால் மாஜி தலைவருக்கு விசுவாசமான அந்த சிவசங்கரமானவரிடம் நெருக்கமாக இருந்தவர்களோ அவரது செயல்பாடுகளால் தலைதெறிக்க ஓட்டம் பிடித்திருப்பதுதான் தற்போதைய புதுச்சேரி ஹைலைட்டாகி உள்ளது..’’ என்றார் விக்கியானந்தா. ‘‘கூட்டணி உருவாகாத நிலையில் சட்டென தேர்தல் வந்ததால் பதறிப்போயிருக்கிறார்களாமே இலை கட்சியினர்..’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழ்நாட்டில் முதல் கட்ட தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது, இலை கட்சியினர் மத்தியில் பதற்றத்தை அதிகரித்துள்ளது. அதாவது இலை கட்சி தனது கூட்டணியில் இருந்து தேசிய கட்சியை கழற்றி விட்டுள்ள நிலையில், இலை கட்சியை தனித்து விடுவதற்காக அந்த கூட்டணிக்கு ேபச்சுவார்த்தை நடத்திய பாமகவை தேசிய கட்சி வளைத்துப் போட்டது. மேலும் கேப்டன் கட்சியையும் ஆசை வார்த்தை கூறி எப்படியும் கூட்டணியில் இணைக்க தேசிய கட்சி முயன்று வருகிறது. இன்னும் 3 நாட்களில் வேட்புமனு தாக்கல் தொடங்க உள்ள நிலையில் இலை கட்சியின் நிலைமை பரிதாபமாக உள்ளது. ஏற்கெனவே இலை கட்சியில் இருந்து பிரிந்த தேனிக்காரர், குக்கர் காரர், சின்ன மம்மி என ஆளுக்கொரு திசையாக கொடி பிடித்து வரும் நிலையில், எந்த கூட்டணியும் இல்லாமல் எப்படி தேர்தலை சந்திக்கப் போகிறோம் என அல்வா உள்ளிட்ட தென் மாவட்ட இலை கட்சியினர் துவண்டு போயுள்ளனர்.
பிரசாரத்திற்கு சேலம் காரரை மட்டுமே நம்பி ஓட்டு சேகரிக்க முடியுமா என்பதால் தேர்தலில் போட்டியிட நினைத்த பலர் பின் வாங்கியுள்ளனராம். இதனால் வேட்பாளராக யாரை நிறுத்துவது என இலை கட்சித் தலைமையும் ஆள் தேடிக் கொண்டிருக்கிறதாம். குழம்பிய குட்டையில் மீன் பிடிப்பது போல இலை கட்சியில் துவண்டு போயிருக்கும் நிர்வாகிகளுக்கு தேசிய கட்சி வலை வீசி வருகிறதாம். இதனால் இலை கட்சியினர் நிலைமை அதோ கதியாக உள்ளது..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘வேட்பாளர் தேர்வில் ஏக குழப்பம் என்கிறார்களே..’’
‘‘கடலோர மாவட்ட எம்பி தொகுதியில் இலைக்கட்சி சார்பில் யாரை வேட்பாளராக நிறுத்துவது என்பதில் பலத்த போட்டி நிலவுகிறது. ஏற்கனவே, கட்சியில் இருந்து சில மாதங்கள் கட்டம் கட்டி வைக்கப்பட்ட அரசனுக்கு மற்றொரு பெயரை பின்னால் கொண்ட மாஜி அமைச்சர், தனக்கு வாய்ப்பு கிடைக்குமென்ற நம்பிக்கையோடு காத்திருக்கிறார். ஆனால், கூட்டணியில் குழப்பம் விளைவித்தார். தொண்டர்களை அரவணைத்துச் செல்லவில்லை. கட்சிப்பணிகளில் ஈடுபாடு இல்லை என அவர் மீது தலைமைக்கு பெட்டிசன் தொடர்ந்து பறந்து சென்றதாம். இப்படி செய்தவர் யாரென்று விசாரித்தபோது, மாவட்ட முக்கிய பொறுப்பு நிர்வாகி உட்பட சிலரின் பெயர் அடிபட்டிருக்கிறது. முக்கிய நிர்வாகி தனக்கோ அல்லது தனது மனைவிக்கோ சீட் கேட்டு கொண்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனால்தான் பெட்டிசனை அனுப்பி வருகிறாராம். இதுபோல கட்சியின் மூத்த நிர்வாகியும் தனது வாரிசுக்கு சீட் கேட்டு கொண்டிருக்கிறார். மாவட்ட முன்னாள் அமைச்சரான டாக்டரானவர், தனக்கு சீட் கேட்டு கொண்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சீட் கேட்பவர்கள் எல்லாம், எதிரெதிர் திசைகளில் பயணிப்பதால், உட்கட்சி பஞ்சாயத்தில் உள்ளதும் போய் விடும். எனவே, புதியதாக ஒருவரை அடையாளம் கண்டு போட்டியிட வைத்தால் என்ன என்றும் அல்லது கூட்டணிக்கு ஒதுக்கி விடுவோமா என்றும் குழப்பத்தில் தலைமை ஆழ்ந்துள்ளதாம். இருந்தாலும் அரசனான மாஜியானவர், தனக்குத்தான் கொடுப்பார்கள் என நெருக்கமானவர்களிடம் கூறி வருகிறாராம்…’’ என்றார் விக்கியானந்தா.