*2 மணி நேரம் போக்குவரத்து ஸ்தம்பித்தது
குமாரபுரம் : அழகியமண்டபம் சந்திப்பில் போதை டிரைவர் ஓட்டி வந்த டாரஸ் லாரி பைக் மீது மோதியது. பொதுமக்கள் திரண்டதால் லாரியை நடுரோட்டில் நிறுத்தி விட்டு டிரைவர் தப்பி ஓடியதால் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து ஸ்தம்பித்தது.அழகியமண்டபம் சந்திப்பு வாகன நெருக்கடி மிகுந்த பகுதியாகும். தக்கலை, மார்த்தாண்டம், குலசேகரம், திங்கள்சந்தை உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் முக்கிய சாலைகள் சந்திக்கும் பகுதி என்பதால் பரபரப்புடன் காணப்படும். தற்போது மண்டைக்காடு கோயில் திருவிழா நடந்து வருவதால் நேற்று வாகன நெரிசல் அதிகம் இருந்தது.
இந்நிலையில் நேற்று இரவு சுமார் 7 மணியளவில் அவ்வழியே வந்த டாரஸ் லாரி பைக் மீது மோதியது.இதில் பைக்கில் இருந்த வாலிபர் கீழே விழுந்தார். அவர் மீது லாரி சக்கரம் ஏற இருந்த நிலையில் பொதுமக்கள் கூக்குரலிட்டதால் டிரைவர் லாரியை உடனே நிறுத்தினார். இதனால் வாலிபர் மயிரிழையில் உயிர் தப்பினர்.லாரியை ஓட்டி வந்த டிரைவர் போதையில் இருந்ததாக கூறப்படுகிறது. பொதுமக்கள் அங்கு திரண்டதால் லாரியை நடுரோட்டில் நிறுத்தி விட்டு டிரைவர் தப்பி ஓடிவிட்டார். இதனால் அழகியமண்டபம் சந்திப்பில் நான்குபுறமும் வாகனங்கள் செல்ல முடியாமல் ஸ்தம்பித்து நின்றன.
இதுகுறித்து தக்கலை காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன் சம்பவ இடம் விரைந்து வந்து போக்குவரத்தை சரி செய்யும் பணியில் ஈடுபட்டார். இதனால் சுமார் 2 மணி நேரத்துக்கு பின் போக்குவரத்து சீரானது.
இந்நிலையில் அங்கு திரண்ட பொதுமக்கள் மற்றும் நாம்தமிழர் கட்சி பிரமுகர்கள், மாவட்டத்தில் டாரஸ் லாரிகள் இரவு 9 மணிக்கு மேல்தான் இயக்கப்படவேண்டும் என்று கட்டுப்பாடு இருக்கும் நிலையில் இந்த லாரி எப்படி சோதனை சாவடிகளை கடந்து இயக்கப்பட்டது என்று போலீசாரிடம் வாக்குவாதம் செய்தனர். இதனால் பரபரப்பு நிலவியது.