பெரம்பூர்: நேற்று வரை அதிமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்திய தேமுதிக, பாமகவை மிரட்டி பாஜவினர் கூட்டணிக்கு அழைக்கின்றனர் என அமைச்சர் தா.மோ.அன்பரசன் குற்றம்சாட்டியுள்ளார். முதல்வர் பிறந்தநாளை முன்னிட்டு தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, கொளத்தூர் தொகுதிக்கு உட்பட்ட ஜிகேஎம் காலனி பகுதியில் உள்ள மைதானத்தில் நேற்று மாலை நடைபெற்றது. திருவிக நகர் மண்டலக்குழு தலைவர் சரிதா மகேஷ்குமார் தலைமை வகித்தார். அமைச்சர் சேகர்பாபு முன்னிலை வகித்தார்.
அமைச்சர் தா.மோ.அன்பரசன் நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசியதாவது: முதல்வர் மு.க.ஸ்டாலின் தேர்தல் அறிக்கையில் சொன்ன 90% வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளார். மேலும் சொல்லாத திட்டங்களையும் நிறைவேற்றியுள்ளார். தேர்தல் பிரசாரம் சூடு பிடித்துள்ளது. கடந்த ஒரு மாதமாக மோடி அதை செய்து விட்டார், இதை செய்துவிட்டார் என அடிக்கடி டிவியில் விளம்பரம் வருகிறது. 10 வருடமாக ஆட்சி நடத்த தெரியாதவர்கள் கடந்த ஒரு மாதமாக வேகமாக விளம்பரம் செய்து வருகிறார்கள். தற்போது ஒன்றிய அரசு ஒன்றரை கோடி பேருக்கு வீடு கொடுத்துள்ளதாக கூறுகிறார்கள். அதில் மாநில அரசு மானியமாக 7 லட்சம் ரூபாய் தருகிறது. ஆனால் பொய்யான விஷயங்களை ஒன்றிய அரசு விளம்பரப்படுத்தி அதன் மூலம் ஆதாயம் தேட பார்க்கிறது.
நேற்று வரை அதிமுகவுடன் தேமுதிகவும், பாமகவும் கூட்டணி பேசிக்கொண்டு இருந்தார்கள். ஒரே இரவில் என்ன ஆனது என்று தெரியவில்லை, மிரட்டி விட்டார்களா என தெரியவில்லை. இன்று பாஜவுடன் கூட்டணி பேசச் சென்று விட்டார்கள். கடந்த 3 வருடமாக அதிமுக என்ற ஒரு கட்சி எங்கே போனது என்று தெரியவில்லை. ஜிஎஸ்டி வரி விதிப்பில் கூட ஒன்றிய அரசு பாஜ ஆளும் மாநிலங்களுக்கு அதிக வரியையும், பாஜ ஆளாத பிற மாநிலங்களுக்கு குறைவான வரியையும் கொடுத்து ஏமாற்றி வருகிறது. இப்பேர்பட்டவர்கள்தான் தேர்தலில் ஓட்டு கேட்க ஊர் ஊராக வரப் போகிறார்கள். எனவே இதனை மக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும். இவ்வாறு பேசினார். இந்த நிகழ்ச்சியில் வடசென்னை எம்பி கலாநிதி வீராசாமி, சென்னை மேயர் பிரியா, பகுதிச் செயலாளர்கள் ஐசிஎப் முரளி, நாகராசன், செயற்குழு உறுப்பினர்கள் சந்துரு, மகேஷ் குமார், இளைஞரணி அமைப்பாளர் லோகேஷ் உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.