சிவகங்கை: ‘தமிழ்நாட்டின் உரிமைகளை அடகு வைத்த கள்ளக்கூட்டணியை காணவில்லை’ என அதிமுக-பாஜ கட்சிகளை விமர்சித்து சிவகங்கை மாவட்டம் முழுவதும் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. சிவகங்கை மாவட்டத்தில், கடந்த சில தினங்களுக்கு முன்பு சிவகங்கை எம்பி கார்த்தி சிதம்பரத்தை காணவில்லை என்ற போஸ்டர் ஒட்டப்பட்டிருந்தது. இந்த போஸ்டர்களை காங்கிரஸ் கட்சியினர் அகற்றினர்.
இந்நிலையில், ‘‘கண்டா வரச் சொல்லுங்க… தமிழ்நாட்டின் உரிமைகளை டெல்லியின் காலடியில் அடகு வைத்த கள்ளக்கூட்டணியை களத்திலேயே காணவில்லை’’ என்ற வாசகங்களுடன் சிவகங்கை நாடாளுமன்ற தொகுதி மக்கள் என்ற பெயரில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன. எடப்பாடி, அமித்ஷா, அண்ணாமலை ஆகியோரது படங்களுடன் இடம் பெற்றிருந்த இந்த போஸ்டர்கள் சிவகங்கை மாவட்டம் முழுவதும் நேற்று ஒட்டப்பட்டிருந்தன. மாவட்டத்தில் நடக்கும் போஸ்டர் யுத்தத்தால் தேர்தல் களத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.