விகேபுரம் : நீர்வரத்து கட்டுக்குள் வந்ததையடுத்து அகஸ்தியர் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. நெல்லை மாவட்டம் பாபநாசம் மேற்கு ெதாடர்ச்சி மலையடிவாரத்தில் பிரசித்தி பெற்ற அகஸ்தியர் அருவி உள்ளது. இந்த அருவியில் ஆண்டுதோறும் தண்ணீர் கொட்டுவதால் உள்ளூர் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து உற்சாகமாக குளித்துச் செல்கின்றனர்.
இந்நிலையில் கடந்த 17ம் தேதி பெய்த தொடர் கனமழை காரணமாக பாபநாசம் அகஸ்தியர் அருவிக்கு செல்லும் வழியில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதுடன் அருவியில் வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டியது. இதனால் அருவிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டது. அதன் பிறகு வெள்ளம் வடிந்த நிலையில் அருவிக்கரையில் அடித்துச் செல்லப்பட்ட தடுப்புகள் சீரமைக்கப்பட்டது. இதனால் 10 நாட்களுக்கு பிறகு கடந்த 27ம் தேதி முதல் சுற்றுலா பயணிகள் செல்ல வனத்துறையினர் அனுமதி வழங்கப்பட்டது.
இந்த சூழலில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்தது. இதையடுத்து பாபநாசம் அணையில் இருந்து 5 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டதால் மீண்டும் மறுநாள் அகஸ்தியர் அருவியில் தடை விதிக்கப்பட்டது. இதை தொடர்ந்து கடந்த 2, 3ம் தேதிகளில் சுற்றுலாப் பணிகள் செல்ல அனுமதி அளித்தனர். ஆனால், நேற்று முன்தினம் (4ம்தேதி) மீண்டும் நீர்வரத்து அதிகரித்ததால் சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு மீண்டும் தடை விதிக்கப்பட்டது.
இந்நிலையில் ேநற்று நீர்வரத்து கட்டுக்குள் வந்ததை தொடர்ந்து காலை 9 மணி முதல் அகஸ்தியர் அருவிக்கும், காரையாறு சொரிமுத்து அய்யனார் கோயிலுக்கு செல்வதற்கும் வனத்துறையினர் அனுமதி வழங்கினர். ஆனால் முறையான அறிவிப்பு இல்லாததால் சுற்றுலா பயணிகள் குறைந்த அளவே வருகை தந்தனர். விடுமுறை தினமான இன்றும் நாளையும் அதிகளவில் சுற்றுலா பயணிகள் வருவர் என எதிர்பார்க்கப்படுகிறது.