செங்கல்பட்டு: செங்கல்பட்டில் விபத்து வழக்கை விசாரிக்க லஞ்சம் வாங்கிய காவலரின் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் காவல் ஆணையரக எல்லைக்கு உட்பட்ட மணிமங்கலம் பகுதியில், சாலையில் சென்று கொண்டிருந்த கார் மீது எதிர் திசையில் வந்த பைக் வேகமாக மோதியதாக கூறப்படுகிறது. இதனால் காரின் முன் பக்கம் முழுவதும் சேதம் அடைந்துள்ளது. இதனால் நொறுங்கிய காரை அங்கிருந்து பொத்தேரியில் இயங்கி வரும் தாம்பரம் போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு காவல் நிலையத்திற்கு பாதிக்கப்பட்டவர் எடுத்துச் சென்றுள்ளார்.
அப்போது அங்கிருந்த காவலர்கள் விபத்து குறித்து விசாரிக்க வேண்டுமென்றால் முதலில் பத்தாயிரம் ரூபாய் கொடுக்க வேண்டும் என கூறியுள்ளனர். இதில் பேரம் பேசப்பட்டதையடுத்து, கடைசியாக உரிமையாளர் ரூ.5 ஆயிரத்தை லஞ்சமாக காவலர் ஜெய்கணேஷ் என்பவருக்கு கொடுத்துள்ளார். இதில் காவலர் ஜெய்கணேஷ் லஞ்சம் பெறும் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. லஞ்சத்தை பெற்றுக் கொண்ட காவலர் ஜெய் கணேஷ், நீதிமன்றத்தில் மாஜிஸ்திரேட் கேட்கும் கேள்விக்கு எப்படி நடிக்க வேண்டும் என நடித்துக் காட்டி அசத்திய காட்சிகளும் அந்த வீடியோவில் இடம் பெற்றுள்ளது.