ஆவடி: ஆவடி செக்போஸ்ட் அருகே, சென்னை-திருத்தணி தேசிய நெடுஞ்சாலையோரத்தில் ஆக்கிரமித்து வைக்கப்பட்டு இருந்த 60க்கும் மேற்பட்ட நடைபாதைகள் கடைகளை நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் பொக்லைன் இயந்திரம் மூலமாக அகற்றினர். இதனால் அங்கு சீரான போக்குவரத்து செயல்பட துவங்கியது. சென்னை-திருத்தணி தேசிய நெடுஞ்சாலையில், ஆவடி செக்போஸ்ட் அருகே கவரைப்பாளையம் பகுதியில் நெடுஞ்சாலையை ஒட்டிய சாலையோரத்தை ஒட்டி ஏராளமான நடைபாதை கடைகள் இயங்கி வந்தன. இதனால் அப்பகுதியில் எந்நேரமும் போக்குவரத்து நெரிசலும் வாகன விபத்துகளும் நடைபெற்று வந்தன.
அந்த சாலையோர ஆக்கிரமிப்பு நடைபாதை கடைகளை உடனடியாக அகற்ற வேண்டும் என்று போலீசார் மற்றும் தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகளிடம் சமூக ஆர்வலர்கள் புகார் மனு அளித்து வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில், சென்னை-திருத்தணி தேசிய நெடுஞ்சாலையில் ஆவடி செக்போஸ்ட் முதல் பட்டாபிராம் இந்து கல்லூரி வரையிலான சாலையோரத்தை ஆக்கிரமித்து வைத்திருந்த 60க்கும் மேற்பட்ட நடைபாதை கடைகளை நேற்று ஆவடி தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் பொக்லைன் இயந்திரம் மூலமாக அகற்றினர். இதைத் தொடர்ந்து, அங்கு போக்குவரத்து நெரிசல் சீரானது. இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.