திருப்பூர்: பழக்கடையில் பணத்தை திருடிய எலி அதை சேதப்படுத்தாமல் பத்திரமாக வலைக்குள் பதுக்கி வைத்திருந்த சிசிடிவி காட்சிகள் வைரலாகி வருகிறது. திருப்பூர் கலைஞர் மத்திய பஸ் நிலையத்தில் மகேஷ் என்பவர் பழக்கடை வைத்து நடத்தி வருகிறார். இவரது கடையில் தினசரி பணம் காணாமல்போவது வாடிக்கையாக இருந்துள்ளது. இரவு நேரங்களில் கல்லா பெட்டியில் வைத்துச்செல்லும் பணம் மறுநாள் காலை வந்து பார்க்கும்போது இல்லாமல் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். ஒவ்வொரு நாளும் இதே நிலை நீடித்ததால் 100 ரூபாய், 50 ரூபாய் என வைத்து சோதித்து பார்த்தபோது பணம் மட்டும் காணாமல் போவது தொடர்ந்துள்ளது. இதைத்தொடந்து கடையில் சிசிடிவி கேமராக்களை பொருத்தி கண்காணித்து வந்தார்.
இந்நிலையில் இன்று காலை கடைக்கு வந்த அவர், கல்லாப் பெட்டியில் வைத்திருந்த பணம் காணாமல் போனது கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதனையடுத்து சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது அவர் மேலும் அதிர்ச்சிக்கு உள்ளானார். அதில், அதிகாலை 4 மணி அளவில் பழங்களுக்கு இடையே புகுந்து வந்த எலி ஒன்று கல்லா பெட்டியில் பிளாஸ்டிக் கூடையில் வைத்திருந்த பணத்தை திருடிச்செல்லும் காட்சி பதிவாகி இருந்தது. இதையடுத்து கடையில் இருந்த பொருட்களை எடுத்து வெளியே வைத்து பார்த்தபோது எலி தங்கி இருந்த வலையை கண்டு பிடித்தார்.
மேலும் இதுநாள்வரை எலி திருடிய பணம் அனைத்தும் எந்தவித சேதமும் இல்லாமல் வலைக்குள் இருந்தது. அதிலிருந்த பணத்தை வெளியே எடுத்து எண்ணிப்பார்த்தபோது 1500 ரூபாய் இருந்தது தெரியவந்தது. பொதுவாக பழத்தை திருடும் எலியை தான் பார்த்திருப்போம். ஆனால் கல்லாப் பெட்டியில் வைத்திருந்த பணத்தை திருடிய எலி அதனை சேதப்படுத்தாமல் வலைக்குள் பதுக்கி வைத்திருந்த சம்பவம் பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.