சோனித்பூர்: அசாமில் காட்டு யானை தாக்கியதில் வனக்காவலர்கள் உள்பட 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். அசாமில் உள்ள சோனித்பூர் மாவட்டம் திராய் மஜூலி கிராமத்தில் வன ஊழியர்கள் சிலர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது தெகியாஜூலி வனப்பகுதியில் இருந்து கிராமத்துக்குள் யானை நுழைந்தது. வனத்துறை ஊழியர்கள் அந்த காட்டு யானையை காட்டுக்குள் விரட்ட முயன்றனர்.
அப்போது யானை தாக்கியதில் வனக்காவலர்கள் இருவர் உள்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். உயிரிழந்த வனக்காவலர்கள் கோலேஸ்வர் போரோ, பீரன் ராவா மற்றும் ஜதின் தந்தி என்ற உள்ளூர்வாசி என அடையாளம் காணப்பட்டுள்ளது. அவர்களின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.