Sunday, October 6, 2024
Home » ஒரு தெய்வம் தந்த பூவே

ஒரு தெய்வம் தந்த பூவே

by Nithya

நன்றி குங்குமம் தோழி

குழந்தைகளின் உண்ணுதல் குறைபாடுகள் (Eating Disorders in Children)

சிறு குழந்தைகள் முதல் பதின்பருவத்தினர் வரை தாக்கக்கூடிய மற்றுமொரு முக்கியமான மனநலப் பிரச்னை உண்ணுதல் கோளாறுகள் (Eating Disorders). மனித வாழ்க்கைக்கு ஆதாரமானதும், உடலின் சக்திக்கு அடிப்படைத் தேவையானதுமான உணவை உட்கொள்வதிலேயே பிரச்னை ஏற்படுவதால் இந்தக் கோளாறு இவர்கள் உடல், மன ஆரோக்கியத்தை பெருமளவு பாதிக்கிறது. உண்ணுதல் கோளாறில் பல வகைகள் உள்ளன. சிறுவயதினர் மற்றும் டீன்ஏஜ் பருவத்தினரிடையே வித்தியாசப்படுகின்றன.

1. பிக்கா (Picca)

ஒரு குழந்தை உணவு அல்லாத பிற பொருட்களை தொடர்ந்து குறைந்தபட்சம் ஒரு மாதம் வரை சாப்பிட்டு வந்தால், அது ‘பிக்கா’வாக இருக்கலாம். இரண்டு வயதுக்குட்பட்ட குழந்தை அடிக்கடி பல்வேறு பொருட்களை வாயில் வைப்பது சகஜம். அதையே குழந்தை வளர்ந்த பின்பும் செய்தால், அது இயல்புக்கு மாறானது. சிறு குழந்தைகள் சாக்பீஸ், பல்பம், களிமண், அழுக்கு, செங்கல், துணி போன்றவற்றைச் சாப்பிடுவார்கள். இவை விஷத்தன்மை அற்றதாக இருந்தாலும், அவர்களின் உடல்நலத்துக்கு தீங்கு விளைவிக்கக் கூடியது.

‘பிக்கா’ மட்டுமே இருந்தால் பெரிய பாதிப்பு இருக்காது. தானாகவே சில நாட்களில் சரியாகிவிடும். ஆனால், ‘பிக்கா’, வேறு பல மனநலக்கோளாறுகளுடன் (ஆட்டிசம், அறிவுத்திறன் குறைபாடுகள்) சேர்ந்தே காணப்படும். ஆட்டிசம் உள்ள குழந்தைகளுக்கு பிக்கா இருந்தால் உடனடியாக மருத்துவரிடம் அழைத்துச் சென்று சிகிச்சையளிப்பது நல்லது. குழந்தைகள் வேண்டுமென்றே இப்படி சாப்பிட மாட்டார்கள். இரும்பு மற்றும் துத்தநாகச் சத்து குறைபாடு, வளர்ச்சி குறைபாடுகள் போன்ற பல்வேறு காரணங்களால் ‘பிக்கா’ கோளாறு உருவாகும் வாய்ப்பு உண்டு. பெற்றோரின் போதிய கவனிப்பின்மை கூட காரணமாகலாம்.

ஊட்டச்சத்துக் குறைபாடு, நோய்த்தொற்று போன்ற விளைவுகளை பிக்கா ஏற்படுத்தும் என்பதால் இதற்கு உடனடி சிகிச்சை அவசியம். முதல்படியாக குழந்தைக்கு சீரான, ருசியான ஆரோக்கியமான உணவுகள் கொடுக்க வேண்டும். வீட்டில் மற்றும் சுற்றுப்புறத்திலும் குழந்தை எடுத்து உண்ணக்கூடிய இத்தகைய பொருட்களை அப்புறப்படுத்த வேண்டும். குழந்தைகள் இத்தகைய பொருட்களை உண்பதற்கு அப்பொருட்களின் ருசி மற்றும் அமைப்பைத்தவிர, அதில் கிடைக்கும் ஒருவகை தூண்டுதலும் காரணமாக இருக்கலாம். இதுபோன்ற தூண்டுதல்களுக்கு திருப்தி அளிக்கக்கூடிய அவர்களுக்கு பிடித்த விளையாட்டு, பாதுகாப்பான உணவை ரசித்து சுவைப்பது போன்ற விஷயங்களில் பெற்றோர்கள் அவர்களை ஈடுபடுத்தலாம்.

2. அசைபோடும் கோளாறு (Rumination Disorder)

சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போதோ, சாப்பிட்ட கொஞ்ச நேரத்திலோ, தன்னிச்சையாக உணவு செரிக்காமல் திரும்ப (வாய்க்குள்) வெளியே வந்துவிடும். அப்படி வரும் உணவை மென்று உண்ணுதல் அல்லது துப்புவதும் உண்டு. சிலநேரம் இரைப்பைக் கோளாறினால் இந்த அறிகுறிகள் ஏற்பட்டிருந்தால் அது அசைபோடும் கோளாறாக (Rumination Disorder)இருக்காது. சாப்பிட்ட உணவு வெளியே வந்துவிடுவதால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் மற்றவர்களுக்கு அசிங்கப்பட்டு உணவு உட்கொள்வதை மிகவும் குறைத்துக் கொள்வதும் உண்டு. இதனால்
ஊட்டச்சத்துக் குறைபாடு ஏற்படுவதோடு, உடல் எடை குறைவதும் உண்டு.

3 மாதம் முதல் 12 மாதக் குழந்தைகளிடையே இவ்வாறு தோன்றும் அறிகுறிகள் பலநேரங்களில் குறிப்பிட்ட காலக்கட்டத்துக்குப் பிறகு தானாகவே மறைந்து விடுவதும் உண்டு. பெரிய குழந்தைகளுக்கு பல மாதங்களாக இந்த தொந்தரவு நீடிப்பதும் உண்டு. கடுமையான மன உளைச்சலால் இக்குறைபாடு வரலாம்.

காரணங்கள்

* பெற்றோர்களால் குழந்தைகள் புறக்கணிக்கப்படுவதாலும், குழந்தையோடு தாயின் ஆரோக்கியமற்ற உறவினாலும் ஏற்படலாம்.

* சிலநேரங்களில் குழந்தைகள் தன்மீது மற்றவர்களின் கவனத்தை ஈர்ப்பதற்காகவும் இவ்வாறு செய்யலாம். இதற்காக வேண்டுமென்றே குழந்தை செய்வதாகவும் எடுத்துக் கொள்ளக்கூடாது.

* வளர்ச்சியின்மை, எடைக்குறைவு, நீர்ச்சத்துக்குறைபாடு போன்ற உடல் சார்ந்த பிரச்னைகள் இக்கோளாறினால் வரக்கூடும் என்பதால் மனநல மருத்துவரின் உதவியோடு சிகிச்சை அளிக்கப்பட்டால் இயல்பாக உணவு உண்ணவும், வாந்தி எடுப்பதை தடுக்கவும் முடியும்.

* பெற்றோர் செய்யவேண்டியது, ஒரு குழந்தை திட உணவு உண்ண ஆரம்பிக்கும் பருவம் முதலே, அக் குழந்தை உணவு உண்ணும் நிகழ்வு பயமுறுத்தும்படியோ, வற்புறுத்துவதாகவோ இல்லாமல், அமைதியாகவும் மகிழ்ச்சியாகவும் இருப்பதாக பார்த்துக் கொள்ள வேண்டும்.

3. உணவைத் தவிர்த்தல் அல்லது உணவைக் குறைக்கும் கோளாறு (Avoidant Restrictive Food Intake Disorder – ARFID)

சிறு குழந்தைப் பருவத்தின் ஆரம்பத்திலேயே தொடங்கும் இவ்வகை உண்ணுதல் கோளாறு முதலில் சாதாரணமாகத்தான் தெரியும். ஏனெனில், குழந்தைப் பருவத்தில் பொதுவாக சில வகை உணவுகளை அதன் நிறம், வாசனை, கடினத்தன்மை போன்ற காரணங்களால் சில குழந்தைகள் தவிர்ப்பதைப் பார்த்திருப்போம். ஆனால், பசி, உணவு உட்கொள்ளும் அளவு, வளர்ச்சி எல்லாம் சரியாகவே இருக்கும். ஊட்டச்சத்து குறைபாடு வெளிப்படையாகத் தெரியாது. பொது இடங்களுக்கு செல்வதையும், பழகுவதையும் கூட இதனால் தவிர்ப்பதுண்டு.

பொதுவாக குழந்தைப்பருவ முடிவில் தானாகவே இக்கோளாறு மறைந்துவிடும். சிலருக்கு பெரியவர்கள் ஆனாலும் இப்பழக்கம் நிலைத்துவிடுவதுண்டு. இக்கோளாறால் பாதிக்கப்பட்டவர்களுக்கு புதுவகை உணவு குறித்த பதற்றத்தைக் குறைப்பதற்கும்,உணவுகளை தவிர்க்காமல் உட்கொள்வதற்கும் நடத்தை சிகிச்சை (Behavior therapy). அறிவாற்றல் நடத்தை சிகிச்சை (Cognitive-behavior therapy) முறைகள் நல்ல பலனளிக்கும்.

இவையெல்லாம் சிறு குழந்தைகளுக்கு (Toddlers) வரக்கூடியவை. இவை தவிர, டீன்ஏஜ் பருவத்தினர், பசியற்ற உளநோய் (Anorexia Nervosa) புலுமியா நெர்வோசா (Bulimia Nervosa) மற்றும் மிதமிஞ்சி உண்ணுதல் ( Binge-eating) போன்ற மூன்று முக்கியமான உண்ணுதல் கோளாறுகளால் பாதிக்கப்படுபவர்களாக இருக்கிறார்கள்.

4. பசியற்ற உளநோய் (Anore Nervosa )

டீன்ஏஜ் பருவத்துக்கு முந்தையை பருவத்தில் உள்ளவர்களும், டீன்ஏஜ் பருவத்தில் உள்ளவர்களும் தங்களுடைய உடல் உருவம் (Body image) பற்றிய அதீத கவலையில் உள்ளனர். இவர்களுக் கு பசியற்ற உளநோய் (Anore Nervosa) வரக்கூடிய வாய்ப்பு அதிகம். அனோரெக்ஸியா கோளாறு உள்ளவர்கள் ஆபத்தான ஒல்லியாக இருந்தாலும் கூட, தங்களை பருமனானவர்களாகக் கற்பனை செய்து கொள்கின்றனர்.

அவர்கள் ஒல்லியாக இருப்பதில் வெறி கொண்டவர்களாகவும், குறைந்தபட்சம் இருக்கவேண்டிய சாதாரண எடையைக் கூட பராமரிக்கவும் மறுக்கிறார்கள்.தேசிய மனநல நிறுவனத்தின் ஆய்வுப்படி 25 பெண்களில் ஒருவர் தங்கள் வாழ்நாளில் பசியற்ற உண்ணுதல் கோளாறினால் (Anore Nervosa) பாதிக்கப்படுவதாகவும், அவர்களில் பலர் தங்களுக்கு உண்ணுதல் கோளாறு இருப்பதை மறுப்பவர்களாகவும் இருப்பதாக தெரிகிறது.

அனோரெக்ஸியாவின் அறிகுறிகள்

* கவலை, மனச்சோர்வு, எதிலும் முழுமைத்துவம் எதிர்பார்ப்பது அல்லது மிகவும் சுயவிமர்சனம் செய்பவர்களாக இருத்தல்.

* தான் ஒல்லியாக இருந்தாலும் கூட உணவுக் கட்டுப்பாட்டில் இருப்பது.

* அதீத உடற்பயிற்சி மேற்கொள்ளுதல்

* கடுமையான உணவுக்கட்டுப்பாடு

* எடை குறைவாக இருந்தாலும், தான் சாப்பிடும் உணவு கொழுப்பாக மாறிவிடுமோ என்ற பயத்திலேயே இருப்பது

* ஒழுங்கற்ற மாதவிடாய் அல்லது மாதவிடாய் நின்றுவிடுதல்

* விரைவான எடை இழப்பு மற்றும் தன் உடல் பருமனை தளர்வான ஆடை அணிந்து மறைக்க முயற்சிப்பது.

* உணவைத்தவிர்ப்பது அல்லது மறைவாக சாப்பிடுவது, ஒவ்வொரு வாய் உணவையும் கண்காணித்து உண்பது அல்லது சில குறிப்பிட்ட உணவுகளை மட்டும் குறைந்த அளவே உண்பது போன்ற வித்தியாசமான உணவுப்பழக்கங்களை உடையவராக இருத்தல்.

* உணவில் அசாதாரண ஆர்வம் இருத்தல் அனோரெக்ஸியா கோளாறினால், மூளை, இதயம் மற்றும் சிறுநீரக பாதிப்பு போன்ற கடுமையான உடல்நலப்பிரச்னைகள் வரக்கூடும். மேலும், ரத்த அழுத்தம், உடல்வெப்பநிலை, மூச்சு எண்ணிக்கை போன்றவற்றை குறைக்கக்கூடிய அபாயமும் உண்டு. இவை தவிர, எலும்புகளை வலுவிழக்கச்செய்வதோடு, உடலின் குளிர்ச்சியை தாங்கும் சக்தியை குறைக்கிறது.

சிகிச்சை

இக்கோளாறை சரி செய்ய மனஅழுத்த எதிர்ப்பு மருந்து (Antidepressant medication), நடத்தை சிகிச்சை, உளவியல் சிகிச்சை போன்ற நீண்ட கால சிகிச்சை முறைகள் தேவைப்படுகிறது.

5. புலிமியா (Bulimia)

குழந்தைகள் மற்றும் டீன்ஏஜ் பருவத்தினரை தாக்கக்கூடியது இந்த புலிமியா எனப்படும் உண்ணுதல் கோளாறு. அனோரெக்ஸியா போன்றே புலிமியா உள்ள டீன்ஏஜ் பருவத்தினரும் தங்கள் உடல் எடை கூடுவதைப்பற்றி அதிக அச்சம் உள்ளவர்களாகவும் தங்கள் உடலைப்பற்றி எப்போதும் மகிழ்ச்சியற்றவர்களாகவும் இருக்கிறார்கள்.

இவர்கள் குறைந்த இடைவெளிகளில் மீண்டும் மீண்டும் அதிக உணவை உண்பவர்களாகவும் இருக்கிறார்கள். புலிமியாவால் பாதிக்கப்பட்ட குழந்தைகளும் இளைஞர்களும் உணவின் மீது கட்டுப்பாடற்ற ஈடுபாடுள்ளவர்களாகவும், அதே நேரத்தில், அதிகமாக சாப்பிட்ட பிறகு, தங்கள் மீதே வெறுப்பாகவும், வெட்கமாகவும் உணர்கிறார்கள். இந்நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தாங்கள் சாப்பிட்ட உணவை வாந்தி எடுப்பது அல்லது மலமிலக்கிகள் பயன்படுத்துவது, உணவுக்கட்டுப்பாட்டு மாத்திரைகள் எடுத்துக் கொள்வது, டையூரிடிக்ஸ் அல்லது எனிமாவைப் பயன்படுத்துவது போன்ற செயல்களில் ஈடுபடுவார்கள். இவர்கள் சாப்பிட்ட உணவை உடலிலிருந்து வெளியேற்றிய பிறகே நிம்மதியாக உணர்வார்கள்.

தொடர்ச்சியாக மூன்று மாதங்களாக, வாரத்திற்கு இரண்டு மூன்று முறை ஒருவர் இதுபோன்ற செயல்பாடுகளில் ஈடுபடுவதை வைத்து, அவர் புலிமியாவால் பாதிக்கப்பட்டிருக்கிறார் என்பதை மருத்துவரால் கண்டறிய முடியும். புலிமியா உள்ளவர்கள் பொதுவாக,சாதாரண எடை வரம்பிற்குள் ஏற்ற இறக்கமான எடை உள்ளவர்களாகவும், சிலர் அதிக எடை உள்ளவர்களாகவும் இருப்பார்கள். 25 பெண்களில் ஒருவர், அவர்களின் வாழ்நாளில் ஒரு முறையாவது புலிமியாவால் தாக்கப்படுவர்.

* போதை மருந்துகள் மற்றும் மதுப்பழக்கம்
* மலமிளக்கிகள் மற்றும் எடை குறைப்பு சிகிச்சைகள் எடுப்பது
* கவலை, அதிக உணவை உண்பது
* திருட்டுத்தனமாக யாருக்கும் தெரியாமல் உண்பது அல்லது விசித்திரமான உணவு முறைகளை கடைபிடிப்பது
* தீவிர உடற்பயிற்சிகளை செய்வது
* அலைபாயும் மனநிலை (Mood swings)
* உடல் தோற்றத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பது.
* சாப்பிட்ட பிறகு பாத்ரூமில் அதிக நேரம் செலவழிப்பதை வழக்கமாக வைத்திருப்பார்கள்.

மேற்சொன்னவை எல்லாம் புலிமியாவின் அறிகுறிகள். இவர்களின் இந்த பழக்கவழக்கங்களினால் தீவிரமான உடல் பிரச்னைகள் ஏற்படலாம். நாள்பட்ட வாந்தியினால் வயிற்றில் அமிலங்கள் சுரக்கக்கூடும். பற்களின் எனாமலுக்கு சேதம், உணவுக்குழாய் அழற்சி, கன்னப்பகுதியில் உள்ள உமிழ்நீர் சுரப்பிகளில் வீக்கம் போன்ற சிக்கல்கள் வரும். மேலும், ரத்தத்தில் பொட்டாசியத்தின் அளவு குறைவதால், அசாதாரண இதயத்துடிப்பிற்கு வழி வகுக்கும்.

சிகிச்சை

விசித்திரமான இவர்களது உணவுப் பழக்கத்தை மாற்றுவதற்காக

* மனஅழுத்த எதிர்ப்பு மருந்துகள்,
* நடத்தை மாற்றம்,
* பாதிக்கப்பட்டவருக்கான தனிநபர், குடும்பம் அல்லது குழு சிகிச்சை போன்ற சிகிச்சை முறைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

6. குழந்தைகள் மற்றும் டீன்ஏஜ் பருவத்தினர் அதிகமாக சாப்பிடுவது (Binge eating in children and teens)

அதிக உணவு எடுத்துக் கொள்ளும் இந்த கோளாறானது புலிமியாவை போன்றே மற்றுமொரு உண்ணுதல் கோளாறு வகையைச் சார்ந்தது. இவ்வகை கோளாறு உள்ளவர்கள், நாள்பட்ட, கட்டுப்பாடற்ற, குறைந்த நேரத்தில் அதிக அளவு உண்பதை, அதாவது, வயிறு வெடிக்கும் வரை கூட, அதிகமாக சாப்பிடுவார்கள். ஆனால் புலிமியா கோளாறு உள்ளவர்களைப்போல் தாங்கள் அதிகமாக உண்ட உணவை வாந்தி அல்லது பிற வழிகளில் சுத்தப்படுத்த மாட்டார்கள். இதன் விளைவாக, அவர்கள் அதிக உடல் எடை உள்ளவர்களாகவோ அல்லது உடல்பருமன் நோயாளிகளாகவோ மாறுகிறார்கள்.

அதிகமாக உண்பவர்கள் (Binge eating) தங்கள் உணர்ச்சிகளைக் கையாள முடியாமல் தவிக்கலாம். கோபம், கவலை, மன அழுத்தம், சோகம் அல்லது சலிப்பு ஆகியவற்றால் ஒரு தீவிர மனஉளைச்சலைத் தூண்டலாம். பெரும்பாலும், அதிகமாக உண்பவர்கள் (Binge eating) தாங்கள் அதிகமாக சாப்பிடுவதைப் பற்றி வருத்தப்பட்டு மனச்சோர்வடையலாம்.
அதிகப்படியான உணவு உண்பதால் ஏற்படும் உடல் பருமனால், உங்கள் மகன் அல்லது மகளுக்கு இதய நோய், உயர் ரத்த அழுத்தம், உயர் கொழுப்பு மற்றும் டைப் 2 நீரிழிவு போன்ற ஆபத்தான உடல்நலப் பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்.

சிகிச்சைகள்

* நடத்தை மாற்ற சிகிச்சை
* மனஅழுத்த எதிர்ப்பு மருந்துகள்
* உளவியல் சிகிச்சை போன்ற சிகிச்சை முறைகள் மூலம் இவர்களை ஆபத்திலிருந்து காப்பாற்றலாம்.

You may also like

Leave a Comment

5 × 1 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi