பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே பிஎஸ்என்எல் ஊழியர் வீட்டில் 50 பவுன் நகை, ரூ.1 லட்சம் கொள்ளை போனது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே ஆ சங்கம்பாளையம் சேரன் நகரில் வசிப்பவர் பாலாஜி (48). பிஎஸ்என்எல் ஊழியர். இவர் நேற்று முன்தினம் வீட்டை பூட்டி விட்டு உடுமலை ரோடு சின்னம்பாளையம் அருகே உள்ள தனது சகோதரர் வீட்டுக்கு சென்றார். இந்த நிலையில் நேற்று, பாலாஜியின் வீட்டு முன் கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதியினர் பாலாஜிக்கு தகவல் தெரிவித்தார்.
இதை கேள்விப்பட்டு பாலாஜி உடனடியாக வீட்டுக்கு விரைந்து வந்தார். உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த 50 பவுன் நகை மற்றும் ரூ.1 லட்சம் கொள்ளை போயிருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த பாலாஜி இதுகுறித்து மகாலிங்கபுரம் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். இதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், விசாரணை நடத்தினர். மேலும் வழக்கு பதிந்து அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.