சாயல்குடி, ஏப்.16: திரு உத்தரகோசமங்கை மங்கள நாதர், மாரியூர் பழமையான பூவேந்தியநாதர் கோயில் சித்ரா பவுர்ணமி, திருக்கல்யாண பெருவிழா கொடியேற்றத்துடன் நேற்று முன்தினம் துவங்கியது. ராமநாதபுரம் சேதுபதி சமஸ்தானத்திற்கு பாத்திய பட்ட உத்தரகோசமங்கையில் புகழ் பெற்ற மங்களேஸ்வரி உடனுரை மங்களநாதர் கோயில், கடலாடி அருகே மாரியூரில் ராமநாதபுரம் பவளநிற வல்லி சமேத பூவேந்திய நாதர் கோயில் உள்ளது.
திரு உத்தரகோசமங்கையில் சித்திரை திருவிழா நேற்று முன்தினம் மாலை கணபதி ஹோமம் கொடியேற்றத்துடன் துவங்கியது. நாள்தோறும் அம்பாள், சுவாமி காமதேனு, சிம்மம், பூதம், அன்னம் என பல்வேறு வாகனங்களில் வீதி உலா நடக்கிறது. முக்கிய நிகழ்வான திருக்கல்யாணம் 22ம் தேதி மாலையும், தேரோட்டம் 23ம் தேதி மாலையும் நடக்கிறது. இதுபோன்று மாரியூரில் சித்ரா பவுர்ணமி, திருவிளையாடல் புராணப்படி கடலில் வலை வீசும் படலம் மற்றும் அம்பாள், சுவாமி திருக்கல்யாண திருவிழா 11 நாள் கொண்டாடப்படுகிறது.
நேற்று கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது. முன்னதாக யாகசாலை பூஜை, கணபதி ஹோமம், பூர்ணா குதி, தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து நந்திக்கொடி கலச கும்ப நீர், மங்கல இசை வாத்தியங்கள் சிவாச்சாரியார் வேத மந்திரங்கள் முழங்க சென்று ஆலய கொடிமரத்தில் கொடியேற்றம் நடைபெற்றது.அதற்கு முன்பாக கொடி மரத்திற்கு பால், தயிர், சந்தனம், இளநீர்,பன்னீர் விபூதி, பஞ்சாமிர்தம் 18 வகையான மூலிகை திரவிய அபிஷேக அலங்காரம் தீபாராதனை நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சிவபெருமான் வலை வீசும் படலம் திருவிளையாடல் திருக்கல்யாண விழா ஏப்.23ல் நடைபெற உள்ளது.