ஈரோடு, ஏப்.7: ஈரோடு மாவட்டம் தாளவாடி கிருஷ்ணபுரம் பகுதியை சேர்ந்தவர் ரங்கராஜ் (59). இவருக்கு கடந்த ஒன்றரை வருடங்களாக நீரிழிவு நோய், ரத்த அழுத்தம் மற்றும் சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கு மருத்துவமனைகளில் சிகிச்சை பார்த்தும் குணமாகவில்லை. இதனால், மனவேதனையில் இருந்த ரங்கராஜ் கடந்த மாதம் 26ம் தேதி வீட்டில் இருந்த மண்ணெண்ணையை தனக்கு தானே உடலில் ஊற்றி தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார்.
இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் ரங்கராஜை மீட்டு முதலுதவி சிகிச்சைக்காக தாளவாடி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர், மேல்சிகிச்சைக்காக சாம்ராஜ் நகரில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி ரங்கராஜ் நேற்று முன்தினம் உயிரிழந்தார். இது குறித்து தாளவாடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.