ஏர்வாடி, ஏப்.6: ஏர்வாடி அருகே தேர்தல் பறக்கும் படை அதிகாரி ஆதிநாராயணன் தலைமையிலான குழுவினர் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த கார் ஒன்று அதிகாரிகளை கண்டதும், வந்த வழியிலேயே திரும்பி சென்றது. இதனை பார்த்த பறக்கும் படை குழுவினர் அந்த காரை துரத்தி சென்று மடக்கிப் பிடித்தனர். காரை சோதனையிட்ட போது அதில் சில பெண்கள் பணத்துடன் இருப்பது தெரிய வந்தது. மேலும் அவர்கள் ரூ 2.6 லட்சம் வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்கள் திருக்குறுங்குடி சார்பதிவாளர் அலுவலகத்திற்கு பத்திரம் பதிவு செய்வதற்காக பணத்தை கொண்டு வந்ததாக தெரிவித்தனர். இருப்பினும் அந்த பணத்திற்கு உரிய ஆவணம் இல்லாததால் தேர்தல் பறக்கும் படையினர் 2 லட்சத்து 6 ஆயிரம் ரூபாய் நாங்குநேரி தாசில்தார் பாஸ்கரனிடம் ஒப்படைக்கப்பட்டது.