செய்யாறு, ஏப். 2: செய்யாறு அருகே வாகன சோதனையின்போது பைனான்சியரிடம் ₹1.50 லட்சத்தை தேர்தல் பறக்கும் படையினர் அதிரடியாக பறிமுதல் செய்தனர். மக்களவை தேர்தல் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வரும் 19ம்தேதி நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் தீவிரமாக செய்து வருகிறது. தேர்தலையொட்டி வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் வழங்குவதை தடுக்கும் வகையில் நிலைக்கண்காணிப்பு குழுவினர், பறக்கும் படையினர் சுழற்சி முறையில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன்படி ஆரணி மக்களவை தொகுதிக்குட்பட்ட செய்யாறு- காஞ்சிபுரம் சாலையில் பல்லி கிராமம் அருகே தேர்தல் பறக்கும்படையினர் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த பைக்கை நிறுத்தி சோதனையிட்டனர். அப்போது ₹1.50 கொண்டு சென்றது தெரிய வந்தது. பைக்கில் வந்த நபரிடம் விசாரித்தபோது செய்யாறு அடுத்த குண்ணவாக்கம் கிராமப்பகுதியை சேர்ந்த தனியார் நிதி நிறுவன ஊழியர் சேட்டு மகன் சாரங்கபாணி(32), பைனான்ஸ் கலெக்சன் வசூல் செய்த பணத்தை உரிய ஆவணங்கள் இல்லாமல் எடுத்துச் சென்றது தெரிய வந்தது. இதையடுத்து பறக்கும் படையினர் ₹1.50 லட்சத்தை பறிமுதல் செய்தனர். இதையடுத்து பறிமுதல் செய்யப்பட்ட ₹1.50 லட்சத்தை செய்யாறு சப்-கலெக்டர் அலுவலகத்தில் உள்ள கருவூலகத்தில் ஒப்படைத்தனர்.