கும்மிடிப்பூண்டி: தேமுதிக வேட்பாளர் நல்லதம்பி அறிமுகம் கூட்டத்தில் அதிமுக கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கு உணவு பற்றாக்குறையால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் அதிமுக உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் நிருபர்களை தாக்கியதால் சூசகமாக சமரசம் நடத்தப்பட்டது. கும்மிடிப்பூண்டி அடுத்த தச்சூரில் தேமுதிக கட்சிக்கு சொந்தமான திருமண மண்டபம் உள்ளது. இங்கு, அதிமுக கூட்டணி கட்சியின் தேமுதிக வேட்பாளர் அறிமுக கூட்டம் நேற்று நடந்தது. இதில், அதிமுக கூட்டணி கட்சியை சேர்ந்த மாவட்ட செயலாளர்கள், முன்னாள் அமைச்சர்கள் ஒன்றிய செயலாளர்கள், பேரூர் செயலார்கள், அணிகளின் நிர்வாகிகள் என இந்த கூட்டத்தில் கும்மிடிப்பூண்டி – பொன்னேரி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கட்சி நிர்வாகிகள் என 500க்கும் மேறப்ட்டோர் கலந்து கொண்டனர். இதில் ஆடல் பாடல் முடிந்து அதனை தொடர்ந்து வேட்பாளர் அறிமுகம் கூட்டம் நடைபெற இருந்தது.
இந்த கூட்டம் காலை 10 மணி அளவில் தொடங்கவிருந்த நிலையில் திருவள்ளூரில் அமைந்துள்ள மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலகத்தின் அவசர அழைப்பை ஏற்று தேமுதிக வேட்பாளர் நல்லதம்பி அங்கு சென்றதால் வேட்பாளர் அறிமுக கூட்டம் இரண்டு மணி நேரம் தாமதமாக நடைபெற்றது. இதனால் தேமுதிக நிர்வாகிகளும் அதன் கூட்டணி கட்சி நிர்வாகிகளும் வெகு நேரம் காத்துக்கொண்டிருந்தனர். இதனை தொடர்ந்து, காலதாமதமானதால் உணவு உபசரிப்பு நிகழ்வில் கலந்து கொண்ட கட்சி நிர்வாகிகளுக்கு மதிய உணவாக இறைச்சியுடன் கூடிய அருட்சுவை உணவும் வழங்கப்பட்டது.
இதில் நிர்வாகிகள் பலர் முண்டியடித்து உணவருந்தினர். இதனிடையே மேலும் பலருக்கு உணவு கிடைக்காமல் காத்துக் கொண்டிருந்தவர்கள் மத்தியில் அங்கு சலசலப்பு ஏற்பட்டது. எனவே, எங்கு தங்களுக்கும் உணவு கிடைக்காமல் போய்விடுமோ என்ற எதிர்பார்ப்பில் விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இருக்கைகளை இலைகளுடன் அதிமுக கூட்டணி கட்சி நிர்வாகிகள் தள்ளிவிட்டு பரபரப்பை ஏற்படுத்தினர். இந்நிலையில் செய்தி சேகரிக்கச் வந்த நிருபர்கள் சிலரை அதிமுக நிர்வாகிகள் தாக்கியதால் மேலும் அங்கு பாபரப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அதிமுக மற்றும் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் பலராமன் மற்றும் கே.எம்.டில்லி ஆகியோர் சமரச பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.
நிருபர்கள் தாக்கியதால் அங்கிருந்த சக நிருபர்களும் ஆவேசத்துடன் மாவட்ட செயலாளரிடம் பேசியதால் அறிமுக கூட்டத்தில் மறுபடியும் சலசலப்பு ஏற்பட்டது.
இதையடுத்து அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா நிருபர்களிடம் இனி இது போன்ற அசம்பாவிதம் நடைபெறாது என சூசகமாக பேசி அமைதிப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதால் சமரசமடைந்தனர். இருப்பினும், நிருபர்களை தாக்கிய சம்பவம் நிருபர்கள் மத்தியில் மட்டும்மின்றி பொதுமக்கள் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும், இந்த சம்பம் குறித்து கவரப்பேட்டை போலீசார் அதிமுக நிர்வாகிகள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் தேர்தல் நேரத்தில் மிகவும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.