புதுடெல்லி: கடந்த ஆண்டு தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இருந்து பிரிந்து பாஜ, ஷிண்டே தலைமையிலான கூட்டணி அரசில் இணைந்து துணை முதல்வரானவர் அஜித் பவார். இந்நிலையில், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் பெயர், சின்னத்தை அஜித் பவாருக்கு ஒதுக்கீடு செய்து தேர்தல் ஆணையம் கடந்த 6ம் தேதி உத்தரவிட்டது. சரத்பவார் தலைமையிலான அணிக்கு புது பெயர், சின்னம் ஒதுக்கப்பட்டது. இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையத்தின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று சரத் பவார் தாக்கல் செய்திருந்த மனுவானது உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தபோது, இந்த விவகாரத்தில் சரத் பவார் தொடர்ந்த வழக்குக்கு இந்திய தலைமை தேர்தல் ஆணையம் பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பித்து விசாரணையை மூன்று வாரத்திற்கு ஒத்திவைத்தனர். மேலும் தனக்கென்று சின்னம் ஒதுக்கக்கோரி தேர்தல் ஆணையத்திடம் சரத் பவார் தரப்பு மனு தாக்கல் செய்யலாம் என்றும், அதுகுறித்து ஒரு வாரத்திற்குள் தேர்தல் ஆணையம் முடிவெடுக்க வேண்டும் எனவும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.