துவரங்குறிச்சி, பிப்.12: திருச்சி மாவட்டம், மணப்பாறை, துவரங்குறிச்சி, புத்தாநத்தம், வையம்பட்டி ஆகிய பகுதிகளில் தெரு நாய்களின் அட்டகாசம் அதிக அளவில் உள்ளது. தெரு நாய்கள் கூட்டம் கூட்டமாக சுற்றி திரிகின்றன. அப்போது இருசக்கர வாகனங்களில் செல்வோரை சிறிது தூரம் வரை விரட்டி செல்கின்றன. இதனால் வாகன ஓட்டிகள் தடுமாறும் நிலைக்கு ஆளாக்கப்படுகின்றனர். இதில் சிலர் கீழே விழுந்து காயமடைகின்றனர். தெருக்களிலும், சாலைகளிலும் திரியும் சில நாய்களுக்கு தொழுநோய் தொற்று பாதிக்கபட்டு காணப்படுகிறது.
இதனால் அவ்வாறு தொற்று நோய் உருவாகி உள்ள நாய்களை பார்க்கும்பொழுது பொதுமக்கள் சற்று அச்சம் அடைந்து வருகின்றனர். இதுபோன்று திரியும் தெரு நாய்களுக்கு கால்நடை மருத்துவரை கொண்டு முறையான சிகிச்சை அளிக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் தற்பொழுது பல பகுதிகளில் நாய்களின் அட்டகாசங்கள் இரவு நேரங்களில் அதிகமாக உள்ளதாகவும் பொதுமக்கள் கூறுகின்றனர். அதற்கு அந்தந்த நகராட்சி, பேரூராட்சி அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.