பாடாலூர், பிப். 9: ஆலத்தூர் தாலுகா எலந்தலப்பட்டி கிராமத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்ட சிறப்பு முகாம் நடைபெற்றது. பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா சிறுகன்பூர், டி.களத்தூர், எலந்தலப்பட்டி, தெரணி, கொளத்தூர், திம்மூர், நொச்சிக்குளம் மற்றும் கண்ணப்பாடி ஆகிய கிராமங்களில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்ட சிறப்பு முகாம் நடைபெற்றது. எலந்தலப்பட்டி ஊராட்சியில் நடந்த முகாமுக்கு வேளாண்மை துணை இயக்குனர் (நுண்ணுயிர் பாசனம்) பாண்டியன் தலைமை வகித்தார்.
வேளாண்மை உதவி இயக்குனர் பச்சியம்மாள் முன்னிலை வகித்தார். இந்த முகாமில் கலைஞரின் ஒருங்கிணைந்த வேளாண்மை திட்டத்தின் கீழ் வேளாண்மை துறை, தோட்டக்கலைத்துறை, வேளாண் பொறியாளர் துறை, பட்டு வளர்ச்சி துறை, மீன்வளத்துறை, கூட்டுறவுத்துறை, மின்சாரத்துறை, வருவாய்த்துறை கால்நடை பராமரிப்பு துறை உள்ளிட்ட துறைகளிலிருந்து அலுவலர்கள் தங்களது துறைகளில் செயல்படும் திட்டங்கள் குறித்து விளக்கினர். இதில் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.