மதுராந்தகம்: செங்கல்பட்டு மாவட்டம் சோத்துப்பாக்கத்தில் செய்யூர்-வந்தவாசி சாலையில் ரயில்வே கேட் உள்ளது. இந்த ரயில்வே கேட்டை தினசரி நூற்றுக்கணக்கான கனரக வாகனங்கள் கடந்து செல்கின்றன. மேலும் பள்ளி, கல்லூரிகள், வேலைக்கு மற்றும் மருத்துவமனைக்கு அவசர தேவைகளுக்காக பொதுமக்கள் தினசரி இந்த ரயில்வே கேட்டை கடந்து செல்கின்றனர். இந்த இருவழி ரயில் பாதையில் ரயில்கள் வருவதை ஒட்டி அடிக்கடி ரயில்வே கேட் மூடப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் பெரும் அவதிக்கு உள்ளாகின்றனர். எனவே, இந்த ரயில்வே கேட்டில் மேம்பாலம் அமைப்பதற்கான மண் பரிசோதனை உள்ளிட்டவை ஏற்கெனவே நடந்துள்ளன.
இந்நிலையில், உடனடியாக நிதி ஒதுக்கி போர்க்கால அடிப்படையில் மேம்பாலம் அமைத்து பொதுமக்களின் அவதியை போக்கிட வேண்டுமாய் கேட்டு கொண்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக நேற்று பொதுமக்களிடம் கையெழுத்து இயக்கம் கோரிக்கை முழக்கம் சோத்துப்பாக்கத்தில் நடந்தது. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர் புருஷோத்தமன், மாவட்ட குழு உறுப்பினர் வெள்ளிகண்ணன், கட்சியின் முன்னணி தோழர்கள் ஐயப்பன், விநாயகமூர்த்தி, அரிவராசன், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சித்தாமூர் ஒன்றிய செயலாளர் ராமசாமி, பொருளாளர் பிரதாப் உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர். அப்போது, அவர்கள் அதிகபட்ச போக்குவரத்து நெரிசல் ஏற்படும் இந்த ரயில்வேகேட் பகுதியில் உடனடியாக மேம்பாலம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோஷங்களை எழுப்பியவாறு பொதுமக்களிடம் கோரிக்கைகளை எடுத்துரைத்து அரசுக்கு அளிக்கும் விதமாக கையெழுத்துகள் பெற்றனர்.