நாகர்கோவில்: சசிகலாவுடன் சந்திப்பு ஏன்? என்று ஓபிஎஸ் பதிலளித்து உள்ளார். கன்னியாகுமரி கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட ஓ.பி.எஸ். அணி சார்பில் அதிமுக தொண்டர்களின் உரிமை மீட்பு குழு ஆலோசனைக் கூட்டம் நாகர்கோவிலில் நேற்று நடைபெற்றது.கூட்டத்துக்கு பின்னர் நிருபர்களிடம் ஓபிஎஸ் கூறுகையில், ‘அண்ணா நினைவிடத்திற்கு மரியாதை செலுத்த சென்ற போது சசிகலாவை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. மரியாதை நிமித்தமாக நாங்கள் சந்தித்துக் கொண்டோம். அரசியல் பேசவில்லை.
நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் மோடியை ஆதரிக்கிறோம். மிக சிறந்த நிர்வாகத்தை இந்த நாட்டிற்கு அவர் தந்திருக்கிறார். எனவே மூன்றாவது முறையாகவும் அவர் பிரதமராக வருவார். தேசிய ஜனநாயக கூட்டணியில் நாங்கள் நீடிக்கிறோம். அதிமுகவினர் ஒன்றாக இணைய கூடாது என்று எடப்பாடி பழனிசாமி நினைக்கிறார். அவரது எண்ணம் பலிக்காது. சில கட்சிகள் எங்களுடன் கூட்டணி பேசிக் கொண்டிருக்கிறார்கள். பேச்சு வார்த்தை முடிந்ததும் அறிவிப்போம்’ என்றார்.