பொள்ளாச்சி, ஜன.22: பொள்ளாச்சியை அடுத்த பிஏபி., திட்டத்திற்குட்பட்ட மொத்தம் 72 அடி கொள்ளளவு கொண்ட பரம்பிக்குளம் அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீர், பொள்ளாச்சியை அடுத்த சர்க்கார்பதியில் உள்ள நீர்மின் உற்பத்தி நிலையத்தில், மின்உற்பத்தி செய்யப்பட்டு பின் கான்டூர் கால்வாய் வழியாக, திருமூர்த்தி அணை மற்றும் ஆழியார் அணைக்கு செல்கிறது. இதில் கடந்த ஆண்டில் பருவமழை போதியளவு இல்லாததால், பரம்பிக்குளம் அணைக்கு நீர்வரத்து குறைவாகவே இருந்தது.
ஆனால், சேலையார் அணையிலிருந்து அவ்வப்போது பரம்பிக்குளம் அணைக்கு தண்ணீர் திறப்பால், நீர்மட்டம் உயர்ந்தது. இரு வாரத்துக்கு முன்பு சில நாட்கள் கன மழை பெய்தது. அந்நேரத்தில் சில நாட்களாக வினாடிக்கு 500 கனஅடி முதல் 600 கனஅடி வரையிலும் நீர்வரத்து இருந்தது.அதன்பின், மழை இல்லாததால் பரம்பிக்குளம் அணைக்கு நீர் வரத்து குறைந்தது. தற்போது தண்ணீர் வரத்து வினாடிக்கு 30 கனஅடியாக குறைந்துள்ளது. அணையின் நீர்மட்டம் 43 அடியாக உள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.