திருத்துறைப்பூண்டி, டிச.21: திருத்துறைப்பூண்டி உதவி வேளாண்மை இயக்குனர் சாமிநாதன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி வட்டாரத்தில் சம்பா தாளடி பருவத்தில் நேரடி நெல் விதைப்பு செய்யப்பட்டுள்ள பயிர்கள் வளர்ச்சி மற்றும் தூர்கட்டும் நிலையில் உள்ளன. சமீபத்தில் பெய்து வரும் மழை நீரை பயன்படுத்தி வயலுக்கு யூரியா மேலுரம் இடும் பணியினை பெரும்பாலான விவசாயிகள் செய்து வருகின்றனர். அனைத்து விவசாயிகளும் ஒரே நேரத்தில் மேலுரம் இட தொடங்கி இருப்பதால் அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளிலும், தனியார் உர கடைகளிலும் யூரியா உரம் போதுமான அளவு இருப்பு வைக்கப்பட்டுள்ளது. எனினும் சில தனியார் உரக்கடைகளில் யூரியா உரத்துடன் மற்ற இடுப்பொருள்கள் வாங்குமாறு விவசாயிகளை கட்டாயப்படுத்துவதாக புகார் வரப்பெற்றுள்ளது. இதுபோல் புகாருக்கு உள்ளாகும் உரக்கடைகளில் உடனடியாக ஆய்வு மேற்கொண்டு தவறுகள் கண்டறியப்பட்டால் உரக்கடைகளின் விற்பனையை முடக்க உத்தரவு அல்லது தேவைப்பட்டால் உரக்கடை உரிமம் ரத்து செய்தல், முதலியன நடவடிக்கைகளை உர கட்டுப்பாடு சட்டத்தின்படி எடுக்கப்படும் என இதன் மூலம் எச்சரிக்கப்படுகிறது. விவசாயிகள் இது தொடர்பாக புகார் தெரிவிக்க 9698832685,. 9442469775, 6380127078 ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் என்று திருத்துறைப்பூண்டி உதவி வேளாண்மை இயக்குனர் சாமிநாதன் தெரிவித்துள்ளார்.