ஆவடி: ஆவடி சென்னை – திருத்தணி நெடுஞ்சாலையில் உள்ள அரசு வங்கியில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட, மர்ம நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். ஆவடி சி.டி.எச். சாலையில் பஞ்சாப் நேஷனல் வங்கி உள்ளது. இங்கு சுமார் 8,000க்கும் மேற்பட்டோர் வங்கி கணக்கு வைத்துள்ளனர். மேலும், தினமும் 50க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வங்கி சேவையை பெற்று வருகின்றனர். இந்நிலையில், நேற்றுமுன்தினம் மாலை 6.15 மணி அளவில், வழக்கம் போல் வங்கியை பூட்டி விட்டு சென்றனர்.
மீண்டும், நேற்று காலை 9 மணியளவில் இந்த வங்கியின் மேலாளர் சிவதேவி(35) என்பவர் வங்கியை திறக்க வந்தார். அப்போது, வங்கியின் ஷட்டரில் இருந்த பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. இதை கண்டவுடன் அதிர்ச்சி அடைந்தவர், உடனே ஆவடி போலீசில் புகார் அளித்தார். இது குறித்து தகவல் அறிந்ததும், பட்டாபிராம் துணை ஆணையர் சதாசிவம் தலைமையிலான குற்றப்பிரிவு போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தார். பின்னர், நடத்திய விசாரணைையில் வங்கியின் சிசிடிவி கேமரா சர்வீசுக்கு கொடுத்துள்ளது தெரிய வந்தது.
மேலும், கைரேகை நிபுணர்களை வரவழைக்கப்பட்டு கைரேகை பதிவுகளும் எடுக்கப்பட்டுள்ளது. இந்த வங்கி கொள்ளை முயற்சி சம்பந்தமாக ஆவடி போலீசார் வழக்கு பதிவு செய்து வங்கியில் கொள்ளை முயற்ச்சியில் ஈடுபட்ட மர்ம நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இந்த வங்கியானது 25 வருடம் இயங்கி வருகிறது. மேலும், 1 ஆண் உட்பட 7 பெண் ஊழியர்கள் இங்கு பணியாற்றி வருகின்றனர் என்பது குறிப்பிடதக்கது.