புதுடெல்லி: காற்று மாசுபாட்டால் இந்தியாவில் ஆண்டுக்கு 21 லட்சம் பேர் இறக்கின்றனர் என்பது ஜெர்மனியை சேர்ந்த விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. இதுகுறித்து ஜெர்மனியில் உள்ள மேக்ஸ் பிளாங்க் வேதியல் ஆராய்ச்சி மையத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் கூறியதாவது: புதை படிவ எரிபொருட்கள் தொடர்பான காற்று மாசுபாட்டால் ஏற்படும் அனைத்து காரணங்கள் குறித்து ஆராயப்பட்டது. கடந்த 2019ல்,உலகளவில் ஏற்பட்ட 80 லட்சம் இறப்புகள் சுற்றுப்புற காற்றில் உள்ள நுண்ணிய துகள்கள்(பிஎம்2.5) மற்றும் ஒசோன்(ஓ3) ஆகியவற்றால் ஏற்பட்டது தெரியவந்துள்ளன.
இதில் 61 சதவீதம்(50லட்சம்) புதை படிவ எரிபொருளுடன் சம்மந்தப்பட்டது. அனைத்து மனிதர்களால் ஏற்படுத்தப்படும் உமிழ்களை கட்டுப்படுத்துவதன் மூலம் 82 சதவீத மாற்று மாசுபாடு இறப்புகளை தடுக்கலாம். காற்று மாசுபாட்டால் இறப்புகள் தெற்கு மற்றும் கிழக்கு ஆசியா நாடுகளில் தான் அதிகமாக உள்ளன. குறிப்பாக சீனாவில் ஆண்டுக்கு 24 லட்சம் உயிரிழப்புகள் ஏற்படுகிறது.அதற்கு அடுத்தபடியாக இந்தியாவில் ஆண்டுக்கு 21 லட்சம் உயிரிழப்புகள் ஏற்படுகிறது.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.