மதுராந்தகம்: பெரும்பேர் கண்டிகை ஊராட்சியில் கிராம மக்களுக்கு பழக்கன்று தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. செங்கல்பட்டு மாவட்டம், அச்சிறுப்பாக்கம் ஒன்றியம், பெரும்பேர் கண்டிகை ஊராட்சியில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் கிராமப்புற மக்களுக்கு ஊட்டச்சத்து தன்னிறைவை மேம்படுத்த தென்னங்கன்றுகள் மற்றும் பழக்கன்று தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி ஊராட்சி மன்ற வளாகத்தில் நேற்று முன்தினம் நடந்தது.
இதில், ஒன்றியக்குழு பெருந்தலைவர் ஒரத்தி கண்ணன் தலைமை தாங்கினார். ஊராட்சி மன்ற தலைவர் சாவித்திரி சங்கர் முன்னிலை வகித்தார். திட்ட பொறுப்பு அலுவலர் கவிதா அனைவரையும் வரவேற்றார். இதில், நெல்லி, எலுமிச்சை, கொய்யா, சீதாப்பழ கன்றுகளின் தொகுப்பை 300 குடும்பங்களுக்கும், 2 தென்னங்கன்றுகள் அடங்கிய தொகுப்பை ஒன்றிய குழு பெருந்தலைவர் கண்ணன் வழங்கினார். இந்த திட்டத்தின் கீழ் அந்த ஊராட்சியில் மொத்தம் 600 குடும்பங்கள் பயன் பெற்றுள்ளன.
இந்த பழக்கன்று மற்றும் தென்னை மரக்கன்றுகளை பெற்ற கிராம மக்கள் முறையாக அவைகளை பராமரித்து வளர்த்தால் ஊராட்சி நிர்வாகம் சார்பில் பரிசுகள் வழங்கப்பட்ட உள்ளது. இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் வசந்தா கோகுலகண்ணன், ஒன்றியக்குழு உறுப்பினர் பார்த்தசாரதி, மல்லிகா மணி, ஏரிநீர் பாசன சங்க தலைவர் வீரராகவன், உதவி வேளாண்மை அலுவலர் பவானி, தோட்டக்கலைத்துறை உதவி இயக்குநர் திரிபுரசுந்தரி, உதவி தோட்டக்கலை அலுவலர் சாருமதி உள்ளிட்ட கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.