மதுரை: மதுரையில் மனைவியை பிரிந்த துக்கத்தில் வாழ்ந்து வந்த கணவர் மனைவியின் நினைவாக தத்துரூபமாக சிலை செய்து வீட்டில் வைத்துள்ளார். மதுரை அண்ணாநகர் வைகை காலனியை சேர்ந்த மார்கண்டன் பொது பணி துறையில் ஓட்டுநராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். அவரது மனைவி ருக்மணி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உடல்நல குறைவால் உயிரிழந்தார்.
மனைவியின் பிரிவை தாங்க முடியாமல் துக்கத்தில் இருந்து வந்த மார்கண்டன் தனது மனைவி தன்னுடன் வீட்டிலேயே இருப்பது போன்று தத்துரூபமாக சிலை ஒன்றை வடித்து வைத்துள்ளார். இந்த சிலையை செய்ய ரூ.5 லட்சம் செலவானதாக அவர் தெரிவித்தார். மனைவியின் சிலைக்கு விலை உயர்ந்த பட்டுப்புடவை, அணிகலன்கள் என தத்ரூபமாக வடிவம் கொடுக்க தாம் ஆலோசனைகளை வழங்கியதாக மார்கண்டன் தெரிவித்தார். மனைவிக்கு சிலை செய்து அதை எப்போதும் பார்க்கும் வகையில் வீட்டிலேயே நிறுவியுள்ள பாசக்கார கணவரின் செயல் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.