உடுமலை: உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் ஒன்றியத்தில் உள்ள அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி, மெட்ரிக் பள்ளிகளுக்கிடையேயான மாவட்ட அளவிலான குறுமைய விளையாட்டு போட்டிகள் உடுமலை அரசு கலைக் கல்லூரி மைதானத்தில் நேற்று துவங்கியது. போட்டியை ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் துவக்கிவைத்தார். மொத்தம் 106 பள்ளிகளை சேர்ந்த 1680 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். போட்டிகள் மொத்தம் மூன்று நாட்கள் நடக்கின்றன.
வெற்றி பெற்றவர்களுக்கு அமைச்சர் கயல்விழி செல்வராஜ் பரிசு வழங்கினார். விழாவில், கோட்டாட்சியர் ஜஸ்வந்த் கண்ணன், நகர திமுக செயலாளர் வேலுசாமி, பொருளாளர் முபாரக் அலி, நகராட்சி துணைத்தலைவர் கலைராஜன், ஒன்றிய திமுக செயலாளர்கள் செழியன், செந்தில்குமார், மெய்ஞானமூர்த்தி, உடுமலை ஊராட்சி ஒன்றிய தலைவர் மகாலட்சுமி முருகன், ஊராட்சி தலைவர்கள் சவுந்தர்ராஜ் (போடிப்பட்டி), காமாட்சி அய்யாவு (கணக்கம்பாளையம்) உட்பட பலர் கலந்து கொண்டனர்.