தொண்டாமுத்தூர், ஜூலை 28: கோவை தொண்டாமுத்தூர் அருகே உள்ள பூலுப்பட்டி சிறுவாணி மெயின் ரோட்டில் டீக்கடை நடத்தி வருபவர் மாரியப்பன். தினமும் அதிகாலை 2 மணி அளவில் கடையை திறந்து வியாபாரத்துக்கு தயார் செய்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 27ம் தேதி அதிகாலை 2 மணி அளவில் வழக்கம் போல கடையை திறந்து வேலை செய்து கொண்டிருந்துள்ளார். அப்போது அதிகாலை 3 மணி அளவில் கடைக்கு 3 நபர்கள் வந்துள்ளனர். டீ சாப்பிட்டு விட்டு பணம் எவ்வளவு என்று கேட்டுள்ளனர்.
அதற்கு 30 ரூபாய் என மாரியப்பன் கூறியுள்ளார். பணத்தை வாங்கி கல்லா பெட்டி மீது வைத்து மாரியப்பன் வேலையில் மூழ்கியுள்ளார். பின்னர் வந்து பார்த்தபோது, கல்லாப்பெட்டியில் இருந்த பணம் 37,500 ரூபாயை காணாமல் திகைத்துள்ளார். மேலும் 3 பேரும் மாயமாகியிருந்தனர். இதையடுத்து இதுகுறித்து புகாரின்பேரில் ஆலாந்துரை போலீசார் வழக்குபதிந்து, மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.