சென்னை: சென்னை வானொலி ஏ – ரெயின்போ சேவைகள் இணைப்பை உடனடியாக ஒன்றிய அரசு திரும்ப பெற வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
சென்னை வானொலியின் முதன்மை அலைவரிசை 720 கிலோ ஹெர்ட்ஸ் மத்திய அலையில் ஒலிபரப்பாகி வருகிறது. சென்னை ரெயின்போ வானொலி 101.4 மெகா ஹெர்ட்ஸ் பண்பலையில் ஒலிபரப்பபட்டு வருகிறது. இரு வானொலி சேவைகளும் நேற்று காலை 5.48 மணி முதல் இணைக்கப்பட்டு ஆகாசவாணி ஒருங்கிணைந்த சேவை என்ற பெயரில் நிகழ்ச்சிகள் ஒலிபரப்படுகின்றன.
சென்னை வானொலியின் முதன்மை அலைவரிசை ஒலிபரப்பு நிறுத்தப்பட்டால், அது சென்னை வானொலி நிலைய நேயர்களுக்கு பேரிழப்பாக அமைந்து விடும். எனவே, சென்னை ஏ மத்திய அலைவரிசை, பண்பலை வரிசையான ரெயின்போ ஆகியவற்றின் சேவைகள் இணைப்பை உடனடியாக திரும்பப் பெற வேண்டும். இது தொடர்பாக ஒன்றிய அரசுக்கு தமிழக அரசும் அழுத்தம் கொடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.