சென்னை: எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் மருத்துவ படிப்புகளுக்கான விண்ணப்ப பதிவு நேற்றுடன் நிறைவடைந்தது. தமிழ்நாட்டில் உள்ள 38 அரசு மருத்துவ கல்லூரிகளில் உள்ள எம்.பி.பி.எஸ். இடங்கள், 2 அரசு பி.டி.எஸ். கல்லூரியில் உள்ள இடங்கள் மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்கள், நிர்வாக ஒதுக்கீட்டு இடங்கள் என அனைத்து இளநிலை மருத்துவ படிப்பு இடங்களும் கலந்தாய்வு மூலம் வருடம் தோறும் நிரப்பப்பட்டு வருகிறது. நடப்பாண்டில், தமிழகத்தில் 1 லட்சத்து 44 ஆயிரத்து 516 பேர் நீட் தேர்வு எழுதியதில் 78 ஆயிரத்து 693 பேர் தேர்ச்சி பெற்றனர். எனவே நீட் தேர்வில் வெற்றிப்பெற்ற மாணவர்கள் மருத்துவ படிப்பில் சேருவதற்கு தயாராகி வருகின்றனர். மாணவ-மாணவிகள் www.tnhealth.tn.gov.in மற்றும் www.tnmedicalselection.org ஆகிய இணையதளங்கள் மூலம் விண்ணப்பித்து வந்தனர். இந்நிலையில் எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் மருத்துவ படிப்புகான விண்ணப்ப பதிவு நேற்றுடன் நிறைவடைந்துள்ளது. 40 ஆயிரத்திற்கும் அதிகமான விண்ணப்பங்கள் வந்துள்ளதாக மருத்துவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.