பழனி: பழனி அருகே அமர பூண்டி பொன்னர் சங்கர் கோயில் குடமுழுக்கு விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. கடந்த 8 ஆண்டுகளாக ரூ.3 கோடி மதிப்பீட்டில் அமர பூண்டி பொன்னர் சங்கர் கோயிலில் திருப்பணிகள் முடிக்கப்பட்டு குடமுழுக்கு விழா நடத்தப்பட்டது. அப்போது பல்வேறு நதிகளில் இருந்து எடுத்துவரப்பட்ட புனித நீர் யாக சாலையில் வைத்து பூஜித்து வேத மந்திரங்கள் முழங்க கோபுர கலசங்களுக்கு ஊற்றப்பட்டு குடமுழுக்கு விழா நடந்தது.
இதில் 10ஆயிரத்துக்கும் அதிகமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே மேலபுள்ளான் விடுதி கிராமத்திலுள்ள கற்பக விநாயகர் ஆலயத்தின் குடமுழுக்கு விழா கோலாகலமாக நடைபெற்றது. இதில் கருடபகவான் கோயிலை சுற்றிவர சிவாச்சாரியார்கள் கோபுர கலசத்தின் மீது புனித நீரை ஊற்றி கும்பாபிஷேகம் செய்து வைத்தனர்.
இதில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். புதுக்கோட்டை மாவட்டம் மறவம்பட்டி கிராமத்தில் உள்ள சன்னாசிபட்டவர் வடுவச்சியம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு குடமுழுக்கு விழா விமரிசையாக நடைபெற்றது. அப்போது பல்வேறு புனித தளங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட புனிதநீரை சிவாச்சாரியார்கள் மங்கள இசை முழங்க கோயில் ராஜகோபுர கலசத்தில் ஊற்றி கும்பாபிஷேகம் செய்து வைத்தனர். பின்னர் தீபாராதனை காட்டப்பட்டு பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது.