ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டை அருகே பூண்டி ஒன்றியத்தில் நந்திமங்கலம் கிராமத்தில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இந்த கிராமத்தில் வசிப்பவர்கள் வேலை மற்றும் பள்ளி கல்லூரிகளுக்கு செல்ல வேண்டுமானால் நந்திமங்கலம் கிராம சாலை வழியாக போந்தவாக்கம் பஸ் நிறுத்தத்திற்கு சென்று, பின்னர் அங்கிருந்து ஊத்துக்கோட்டை, திருவள்ளூர், கும்மிடிப்பூண்டி போன்ற பகுதிகளுக்கு சென்றுவர வேண்டும். இந்நிலையில், நந்திமங்கலம் கிராம சாலையின் ஓரத்தில் அக்கிராமத்திற்கு செல்லும் மின் கம்பிகள் அறுந்து விழுந்துள்ளது.
எனவே விபத்து ஏற்படும் முன் இதை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது; நந்திமங்கலம் கிராமத்திற்கு செல்லும் செல்லும் வழியில் மின்கம்பிகள் அறுந்து விழுந்துள்ளது. இதை சீரமைக்க வேண்டும் என மின்வாரியத்தில் பல முறை புகார் கூறியும், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உயிர்சேதம் ஏற்படும் முன்பாக மின்கம்பியை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.