வேட்டவலம், ஜூன் 18: ஜமீன் கூடலூர் மகா காலபைரவர் கோயிலில் அமாவாசையையொட்டி பிரத்தியங்கிரா தேவிக்கு மிளகாய் வற்றல் யாகம் சிறப்பு வழிபாடு நடந்தது. வேட்டவலம் அடுத்த ஜமீன் கூடலூர் கிராமத்தில் உள்ள மகா கால பைரவர் கோயிலில் நேற்று ஆனி மாத அமாவாசையையொட்டி கோயில் வளாகத்தில் அமைந்துள்ள பிரத்தியங்கிரா தேவிக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. இதையொட்டி காலை 11 மணிக்கு மிளகாய் வற்றல் கொண்டு சிறப்பு யாகமும், பின்னர் மதியம் 2 மணியளவில் காலபைரவர், பிரத்தியங்கிரா தேவி அம்மனுக்கு பால், பன்னீர், சந்தனம், இளநீர் கொண்டு சிறப்பு அபிஷேக, ஆராதனை ஆகியவை நடந்தது. தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் கால பைரவர், பிரத்தியங்கிரா தேவி அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். பின்னர் பக்தர்களுக்கு கோயில் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.