ஆவடி: ஆவடி அருகே வீடு புகுந்து பட்டுப்புடவை, பூஜை பொருட்களை திருடிச்சென்ற மர்ம ஆசாமியை போலீசார் தேடி வருகின்றனர். ஆவடியை அடுத்த திருநின்றவூர், நத்தம்பேடு பகுதியைச் சேர்ந்தவர் அன்னக்கிளி(63). இவர் காய்கறி வியாபாரம் செய்து வருகிறார். கணவர் இறந்துவிட்ட நிலையில், அன்னக்கிளி தனியாக குடிசை வீட்டில் வசித்து வருகிறார்.
நேற்றுமுன் தினம் மாலை வேப்பம்பட்டு சந்தையில் காய்கறிகளை விற்பனை செய்துவிட்டு, இரவு 10 மணியளவில் வீட்டிற்கு வந்து பார்த்தபோது, வீட்டின் முன்பக்க கதவில் இருந்த பூட்டு உடைக்கப்பட்டிருந்ததைப் பார்த்து அன்னக்கிளி அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது, வீட்டில் வைத்திருந்த பித்தளை பூஜை பொருட்கள் மற்றும் ரூ.5 ஆயிரம் மதிப்புள்ள பட்டுப் புடவைகள் திருடு போனது அவருக்குத் தெரிய வந்தது. இதுகுறித்து அன்னக்கிளி கொடுத்த புகாரின்பேரில், திருநின்றவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.